செவ்வாய், 28 ஜனவரி, 2014

aruseer aasirizamandalam


நான்காம் தலைப்பு : இறை வழிபாடு!


இந்தத் தலைப்பிலும் ஐவர் அழகுற எழுதியுள்ளனர்.

1. திரு. இரா. வசந்த குமார் எழுதிய மண்டிலம்.

(காய் + காய் + காய் + காய் +
மா + தேமா)

நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.

2. திருவமை. உமா எழுதியவை :

மா மா காய்
மா மா காய்

கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!

மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்காப் புகழைத் தான்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்கக்
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு

மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

கண்ணா அருள்வாயா?

குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை நேராய்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!
பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்)

பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினைப்
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!

நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!


3. திரு. அவனடிமை எழுதியவை :

குறுலீற்று மா+விளம்+மா+
விளம்+விளம்+மா

ஆன்ம உலகினுக் கரசர்
.......ஆண்டவ னெனப்பல ருரைப்பர்
உன்னுள் உருக்குலை யாதோர்
.......உணர்வினைக் காட்டுவே னென்பார்
உந்தன் உடல்பிணி யைத்தன்
.......உருக்கிடும் இசையினால் நீக்கி
உன்னுள் மூச்சிலே உயிரின்
.......உண்மையை உணர்ந்திடு வென்பார்!

ஏங்கும் சீடரும் மடமும்
.......ஏய்த்திடக் கூட்டுற வாகும்
பொன்னும் பெயருடன் பகட்டும்
.......பூவைய ரைப்புலன் புணர
கன்னம் தடவிடும் கணிகை
.......கனிவுடன் பணிவிடை புரிவாள்
இன்னும் பலயில வசமாய்
.......ஈர்த்திடும் இச்சையிற் திளைப்பார்!

அங்கி அறிவிழந் தோமென்
.......றரண்டுநா மழுதிட வேண்டா
இங்கிவ் வினவொளி மறைக்க
.......ஈசலா னந்தருக் காகா
தெங்கும் எப்பொரு ளுள்ளும்
.......எரிந்திடும் ஒளியினைக் காட்டும்
குன்றின் மேல்விளக் குலகின்
.......குறைகளும் அவன்திரு வருளே!

மா + மா + காய்
மா + மா + காய்

ஆன்மீ கத்தில் அரசாள
....ஆண்ட வன்போல் அவர்வந்தே
உன்னுள் உறையும் உருக்குலையா
....உணர்வே நானென் றுரைத்திடுவார்
எண்சாண் உடலிற் பிணிகளையும்
....இல்லா தாக்க இசைதொடுத்து
உன்மூச் சினைச்சீ ராக்கிடென
....உனக்கே உரைப்பார் அறிவுரையாய்!

ஏங்கும் சீடர் கூட்டணியும்
....ஏய்க்கும கூட்டம் பின்வரவும்
பொன்னும் பெயரும் பகட்டுடுப்பும்
....பெண்மை அழகும் புலன்புணர
கன்னம் தடவும் கணிகையுடன்
....கற்பாய்ப் பணிவன் போடிருப்பார்
இன்னும் இதுபோல் இலவசசிற்
....றின்பம் பலசேர்த் தனுபவிப்பார்

அங்கி அறிவோ டிழந்தோமென்
....றரண்டு நாமும் அழவேண்டாம்
கங்குல் இனப்பே ரொளியின்முன்
....கலையும் ஈசற் கூட்டமிது
என்றும் எங்கும் எவரிடமும்
....எரியும் ஒளியே எமதிறைவன்
குன்றின் மேலே விளக்கவந்தான்
....குறையும் அவன்பே ரருளன்றோ!

(காய்+காய்+காய்+காய்+
மா+தேமா)

நான்வேறு நீவேறு என்றில்லை பகுத்தறிவாய்
நாடில் ஒன்றே
நான்வேறு பிறர்வேறாய்த் தெரிகிறதே என்றுரைப்பார்
ஞாலந் தன்னில்
நான்நீயாய் அவரதுவாய்த் தோன்றுவதும் ஒருபொருளே
நாம்காண் தோற்றம்
மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
மரமே யன்றோ!

நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
நலமே நல்கும்
உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
ஒன்றாய்க் காணும்
நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணர்வு
நாணித் தோடும்
ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
ஒளிர்வா யன்பே!

4. திரு. திகழ் எழுதியவை :

மா+மா+காய்
மா+மா+காய்

உன்னுள் என்னுள் இருக்கின்ற‌
...இறையைப் புறத்தே தேடுகின்றோம்
பொன்னால் க‌ல்லால் உருவான‌
...சிலையை வ‌ண‌ங்க‌ச் செல்கின்றோம்
அன்பாய்ப் ப‌ண்பாய் இருக்கின்ற
...இறையை உண‌ர‌ ம‌றுக்கின்றோம்
உன்னைத் தேடி ப‌டைத்த‌வ‌னும்
...வ‌ருவான் அன்பைப் பொழிந்தாலே!

காவி உடுத்த சாமிக்கு
...எதற்குக் காசு பணமெல்லாம்
கூவி அழைத்து விற்பாரே
...கூறு போட்டு ஆண்டவனைப்
பாவி யாக்க பார்ப்பாரே
...பார்த்து நடந்து கொள்ளுங்கள்
ஆவி அடங்கும் முன்னாலே
...ஆசை செய்யும் ஆட்டமடா!

5. திரு. அண்ணாமலை எழுதியவை :

மா+ மா+ காய்
+மா+மா+காய்

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

அருமையாக மண்டிலங்கள் எழுதிய அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் உரித்தாக்குகின்றோம்.

அடுத்து, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதப் பயில்வோம்.
-------------------------------------------------------------------------------------------
5

மூன்றாம் தலைப்பு : இயற்கையின் இனிமை!

இத் தலைப்பிலும் ஐவர் மண்டிலங்கள் எழுதியுள்ளனர்.

1. திருவமை. உமா எழுதியவை :

(மா மா மா மா மா காய்)

மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்!

சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.

(‘வேனில்தான்’ அல்லது ‘வேனிற்றான்’ என்று எழுதுவதே சரி; ‘வேனிற் தான்’ – என்று வராது.)


காற்று

இயற் சீராலானது வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்!
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினைத் தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!

சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!

2.திரு. இரா.வசந்தகுமார் எழுதியவை :

(விளம் - மா - தேமா & காய் - மா - தேமா)

தடவிடக் குளிரும் தென்றல்
தழுவிடச் சிலிர்க்கும் மங்கை
படர்ந்திட மணக்கும் பாகல்
பழுத்திடச் சிவக்கும் கொய்யா
தடங்களில் பதியும் தாரை
தணிந்திட புகையும் சாம்பல்
கடந்திடக் கனக்கும் காட்சி
கனிந்திடக் கழலும் ஞானம்

மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
மறைந்திடச் சிவக்கும் மாலை
உலர்ந்திட இனிக்கும் இச்சை
உகுத்திட மயக்கும் ஓசை
தளர்த்திடத் தடுக்கும் கைகள்
தயங்கிட நடுங்கும் மேனி
வளர்ந்திட குறுகும் தூரம்
வழங்கிடக் குறையும் பாரம்

வெண்ணொலித்த மின்னல் கோடு
வேகவைத்த கன்னல் சாறு
மண்ணொளித்த கடலை வாசம்
மழையிறக்கும் வானின் அம்பு
தண்ணென்று தாவும் ஆறு
தமிழிலொரு குயிலாய்க் கூறு
விண்கீழ்மேல் தனிமை இல்லை
வியப்பேன்நான் இனிமை கொள்ளை.


3. திரு.திகழ் எழுதியவை :

( விளம்+மா+தேமா)

தழுவிடும் தென்றல் துள்ளிக்
...குதித்திடும் வண்ண மீன்கள்
அழகுமான் குளிக்கத் தூண்டும்
...அருவிகள் மின்னும் விண்மீன்
எழில்தரும் பச்சைப் புற்கள்
...மணம்தரும் வண்ணப் பூக்கள்,
மழைதரும் மேகம் இன்னும்
...எத்த‌னை ய‌ம்மா சொல்ல!‌

எத்த‌னை கோடி இன்ப‌ம்...
காண‌க்க‌ண் கோடி வேண்டும்
பித்த‌னாய் நானும் ஆனேன்
...இய‌ற்கையின் அழ‌கைக் க‌ண்டு
ச‌த்த‌மாய்ச் சொல்ல‌ வேண்டும்...
இறைவ‌னின் புக‌ழை என்றும்
சுத்த‌மாய் வைத்துக் கொள்வோம்...
சுற்றிடும் உலகைக் கொஞ்ச‌ம்!


4. திரு.அப்பாதுரை எழுதியவை :

விண்ணக மின்னல் போலே
வீசிளந் தென்றல் போலே
கண்களில் நிற்கும் பெண்ணே
காதல்செய் வோமா என்றேன்
மண்ணுக்குள் ஆண்கள் மேலே
மங்கையெற் காசை யில்லை
பெண்ணுக்குள் காதல் தேடும்
பெண்ணிவ ளறிவீ ரென்றாள்!

தங்கத்தை வைரம் சேரும்
தாமரையை வண்டே நாடும்
இங்கிவையி யற்கை அஃதே
இனிமையு மாகு மென்றேன்
கடலுக்குள் கங்கை கூடிக்
கலப்பதி யற்கை யாயின்
மங்கையரை மங்கை நாடி
மகிழ்வதுமி யற்கை யென்றாள்!


அன்பார்ந்த அப்பாதுரை அவர்களுக்கு,
இயற்கையோ டியைந்த வாழ்க்கையே இனிமை தருவது; இயற்கை யிகந்த வாழ்க்கை இன்னல் தருவதே!
பண்டைத் தமிழர் இயற்கையோ டியைந்த வாழ்க்கையையே தேர்ந்தனர்; வாழ்ந்தனர்.
பிறரிடமிருந்து நாம் ஏற்பது நல்லவையாக மட்டுமே இருக்கட்டுமே! இன்னல் தருவதாக இருக்க வேண்டாவே!
வள்ளுவர் அறியாத பாலறிவா? முப்பால் உணர்த்தாத காமத்துப் பாலா?
எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அவனடிமை ஐயாவின், 


பாலியல் பொல்லாங்கே அப்பா துரைப்பாவின்
பாலியல் பாவிற்றுப் பார்.

- என்ற கவலை ஞாயமானதே.
5. திரு. அண்ணாமலை எழுதியவை :

குறிலீற்றுமா + விளம் + மா+விளம் + விளம் + மா

அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!

அருமையான பாடல்களை இயற்றிய பாவலர்க்கு நன்றி.
சில பாடல்கள் மோனை அமையா துள்ளன.
மோனை பற்றி மீண்டும் ஒருமுறை படித்து, மோனை அமைத்துப் பாடல் எழுதப் பயிலல் சிறப்பு.
நன்றி.


4

இரண்டாம் தலைப்பு : தமிழர் நிலை!

இத் தலைப்பில் ஐவர் எழுதியுள்ளனர்.

1. திரு. அண்ணாமலை எழுதியவை :

ஆறும் மா"ச்சீர்.

கடாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி

இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?


2. திருவமை உமா எழுதியவை :

விளம் மா தேமா
விளம் மா தேமா

பாங்குடன் படித்த லின்றிப்
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கிவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டுப்
போலியைத் தேடி நின்றார்!

பேச்சிலே தமிழை விட்டார்!
பெயரிலும் தமிழைக் காணோம்!
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்!
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்!
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்!

இன்னும் சில...

விளம் மா தேமா
விளம் மா தேமா

சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்!
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்!
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்!

அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!


3. திரு. அவனடிமை எழுதியவை :

(மா+மா+காய்)(தேமா/புளிமா + தேமா/புளிமா + தேமாங்காய்/புளிமாங்காய்/கூவிளங்காய்/கருவிளங்காய்)

பாக்கள் புனைந்து படித்திட்டால்
.........பாழும் வயிறு நிரம்பிடுமா?
தேக்கம் மிகுந்த நம்நாட்டில்
.........தேடுஞ் செல்வம் தென்படுமா?
ஊக்கம் உணவும் உறைவிடமும்
.........உருவாக் கிடுமோர் உறுதொழிலும்
ஆக்கம் அளிக்கும் அயல்நாட்டிற்
.........கறிவுத் தமிழர் புலம்பெயர்ந்தார்!

நீக்கம் நெடுநாள் நெடுந்தொலைவு
.........நிலத்தை விட்டுப் பிரிந்தவரின்
நோக்கம் இன்றி நாட்பொழுதில்
.........நுண்மைத் தமிழும் மலிவாகித்
தாக்கம் வேற்று மொழியினத்தால்
.........தனதின் னொலியில் தான்மருவ
நாக்கில் நரம்பின் றித்துவைப்பார்
.........நையப் புடைப்பார் தமிழ்ப்பாரில்!

வீக்கம் பணத்தில் மட்டுமிலை
.........வீணே எழுதும் சொற்களிரலும்!
வாக்கில் வரம்பை நாம்வைத்தால்
.........வாதா டுவதை விட்டுவிட்டுத்
தாக்கா தவரைத் தன்மையுடன்
.........தக்க முறையில் திருத்திடவே
றாக்கா தென்றும் மொழிச்சுவையை
.........அன்பாய் அளித்தால் தமிழுயரும்!

4. திரு.சிக்கிமுக்கி எழுதியவை :

(விளம் + மா + தேமா)

அன்பெலாம் வறண்ட நெஞ்சம்
அழுக்கெலாம் திரண்ட எண்ணம்
முன்பெலாம் இருந்த மேன்மை
முழுவதும் மறந்த உள்ளம்
தன்னலம் முன்னே நிற்கும்
தமிழினம் அழிவ தற்கும்
முன்துணை நின்ற கீழ்மை
முழுயிழி வதனின் சின்னம்!

ஆற்றுநீர் உரிமை எல்லாம்
அடியுடன் பறிகொ டுத்தும்
ஏற்றமாய்த் தன்கு டும்பம்
இருந்திடும் எண்ணம் ஒன்றே
ஊற்றமாய்த் தங்கும் ஈழ
உடன்பிறப் பழிவ தற்கும்
ஆற்றலாய்த் துணையும் போனான்
ஆமவன் தமிழன் இன்றே!

5. திரு. திகழ் எழுதிய மண்டிலம் :

மா+மா+மா+மா+
மா+காய்

ஆறு பாய்ந்து செழித்த நிலம்
...அனைத்தும் போயிற்று!
வீறு கொண்டு எழுந்து பெற்ற‌
...வெற்றி போயிற்று!
சிறப்பு மிக்க அருமை பெருமை
...சிதறிப் போயிற்று!
உறங்கிக் கிடந்தால் உயர்வு என்றும்
...உண்டோ தமிழர்க்கு?

மிக்க மகிழ்ச்சி!
அறுசீர் மண்டில வகைகளைப் பயன்படுத்தி எழுதும் பயிற்சி நன்கு பலருக்கும் கைவரப் பெற்றிருக்கிறது.
இனி, இலக்கியங்களைப் படித்தும், அணி வகைகளைப் பயன்படுத்தி எழுதப் பழகியும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்!
6

முதல் தலைப்பு : தமிழ்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
மிகவும் சிறப்பாகப் பலரும் மண்டிலப் பாக்கள் எழுதியிருக்கின்றீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
புதிய அன்பரும் கலந்து கொண்டு நன்கு எழுதியிருக்கிறார்.
நம் அகரம் அமுதாவும் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கின்றார்.
ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட மண்டிலங்களைத் தொகுத்தளித்திருக்கின்றேன்.
சில மண்டிலங்களில் சிறு திருத்தம் இருக்கும். எழுதியவர்களுக்கு எளிதில் தெரியும்.

மொத்தத்தில், அனைவரும் நன்றாக எழுதப் பழகியிருப்பது தெரிகிறது.
இங்கு எழுதப்பட்ட பாடல்கள் நூலாக வெளியிடக்கூடிய தகைமை சான்றன என்பதில் ஐயமில்லை.

முதலில், தமிழ் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மண்டிலங்களைத் தொகுத்துக் கீழே தந்துள்ளேன்.

1.திரு.அகரம் அமுதா எழுதியவை :
விளம் + மா + தேமா = என்ற வாய்ப்பாட்டில் அமைந்த பாடல்!

கிழவியே! கிளியே! நாளும்
கிடந்துநான் கொஞ்ச நாணும்
அழகியே! அமுதே! தேனே!
அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
விழுங்கவும் ஒல்லா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டி னுள்ளும்,
உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
ஏங்கினேன் எங்குச் சென்றாய்?


2.திரு. திகழ் எழுதியவை :
தமிழ் ‍- (இயற்சீர் ஆசிரிய மண்டிலம்)

உயிராய் உடலாய் என்னுள்
...உருவம் கொண்டாய் தமிழே!
செயலாய் சொல்லாய் இருந்து
...என்னை ஆளும் தமிழே!
தாயாய் இறையாய் இருந்து
...என்னைக் காப்பாய் தமிழே!
சேயாய் மகளாய் மீண்டும்
...பிறக்க வேண்டும் தமிழே!

கனவாய் நினைவாய் காணும்
...பொருளாய் எல்லாம் நீயே!
வானாய் மண்ணாய் வணங்கும்
...இறையாய் எல்லாம் நீயே!
பொன்னாய் மணியாய் கிடைக்கும்
...புகழாய் எல்லாம் நீயே!
உன்னை யன்றி வேறு
...யாரு மில்லை தமிழே!

எழுத்து வ‌டிவ‌ம் வேண்டு
...மென்று சொல்லிக் கொண்டு
க‌ழுத்தில் க‌த்தி கொண்டு
...அலையும் கூட்ட‌ம் பெருமை
ப‌ழைமை மிக்க‌ த‌மிழைச்
...சிதைக்கு மிந்த‌ நோக்க‌ம்
செழுமை போக்கச் செய்யும்
...சிறுமை சேர்க்கும் அ‌ன்றோ?

திகழ்,
பூசை செய்ய‌ப் பார்த்தால்
...எங்கே சென்றாய் தாயே
இசையாய்க் கேட்க‌ நுழைந்தால்
...காண‌ வில்லை உன்னை
த‌சையைக் காட்டும் ப‌ட‌த்தில்
...சிதைந்து போனாய் நீயோ
ஓசை யின்றி எங்கே
...ஒளிந்து கொண்டாய் த‌மிழே
-இந்த மண்டிலப்பாவில் நெடிற் கீழ் எதுகையும், குறிற்கீழ் எதுகையும் கலந்து வருகின்றன (பூசை, இசை, தசை, ஓசை)
இவற்றை எல்லா அடிகளிலும் நெடிற்கீழ் எதுகையாகவோ, குறிற்கீழ் எதுகையாகவோ மாற்றிவிடுங்கள்.

3. திரு.அண்ணாமலை எழுதியவை :

விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா

உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

4. திரு.சிக்கிமுக்கி எழுதியவை :
(மா + மா + காய்)

அன்னை மொழியே! அறமுணர்த்தும்
அறிவே, உணர்வே அரும்பண்பே!
முன்னைப் பழமைப் பெருமையுறை
முதல்தாய் மொழியே, செந்தமிழே!
பின்னைத் தமிழர் பேதைமையால்
பெருமை குலைந்த பேரழகே!
உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
உரைத்தார் செம்மொழி நீயென்றே!

ஒப்பில் கழக இலக்கியமும்
உலகிற் சிறந்த முப்பாலும்
துப்பில் திகட்டா பாவியங்கள்
சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!
தப்புத் திருத்தித் தருங்கம்பன்
தகைசால் பாவும் பெருங்கதையும்
செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்
திருவாந் தமிழே வாழியவே!


5.திரு. இரா. வசந்த குமார் எழுதிய மண்டிலம்:
(மா - மா - காய்.)

தோழி எனக்கு வளைநகருந்
தோளி னிலெனைச் சாய்த்துக்கொள்.
ஆழி அளவில் மகிழ்வோதீ
அதுவுங் குளிரும் துயரோவுந்
தாழி நிறைத்த கவிகொஞ்சம்
தாவி எடுத்து அமைதியுற,
வாழி என்றும் வான்புகழ
வசந்தப் பெண்ணாய்த் தமிழ்நண்பி!


6. திருவமை.உமா எழுதியவை :
குற்லீற்று மா+ விளம்+ மா
விளம் +விளம்+ மா

பாகு வெல்லமும் தேனும்
பருகிடு கனியதன் சாறும்
போகு மிடமெலாம் வாசம்
புன்னகை வீசிடுந் தென்றல்
ஓடும் ஊரெலாம் ஆறு
ஓங்கிடச் செய்திடு வளனும்
தேடும் இன்பமும் தருமே
தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்

சொல்லச் சுவைத்திடும் நாவும்
சோர்வினை விலக்கிடும் வானின்
வில்லைப் போல்பல வண்ணம்
வியத்தகு தமிழினில் உண்டே
கல்லைச் செதுக்கிய சிலைதான்
கற்றவர் சிந்தையில் தமிழே!
இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்
கிருநில மீதினில் ஈடே!

அவனடிமை ஐயாவின் பாடல் இரண்டாம் தலைப்பில் வருகின்றது.

அறுசீர் மண்டிலம் எழுதுவோம்!

அன்பார்ந்த வலையுலக நட்புள்ளங்களுக்கு,

அகரம் அமுதா அவர்களின் அறிவிப்பின்படி கீழ்க்காணும் நான்கு தலைப்புகளில் அறுசீர் மண்டிலப் பாக்கள் எழுதுமாறு கேட்டுக்கொள் கின்றேன்.
1. தமிழ்

2. தமிழர் நிலை

3. இயற்கையின் இனிமை

4. இறைவழிபாடு

ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு அல்லது மூன்று மண்டிலப் பாக்கள் இருக்க வேண்டும்.

குறைந்தது ஒரு தலைப்பிலேனும் எழுதுங்கள். ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகளில் எழுதுவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

ஒரு தலைப்பில் எழுதப்படும் மண்டிலங்கள் இரண்டானாலும் மூன்றானாலும் அவை ஒரே வகையினவாக இருக்க வேண்டும்.
ஒருதலைப்பில் எழுதப் பயன்படுத்திய அறுசீர் மண்டில வகையை இன்னொரு தலைப்பில் எழுதப் பயன்படுத்த வேண்டா.
மற்ற விளக்கங்கள் அ.அ. அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறே.

29-3-2010க்குள் எழுதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எழுதத் தொடங்குக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 7

அடுத்து, இயற்சீரால் (ஈரசைச் சீரால்) அமையும் அறுசீர் மண்டிலங்கள் எழுதப் பழகுவோம். 

இயற்சீரால் அமையும் அறுசீர் மண்டிலங்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

அ. முதல்வகை :

இவ் வகையில் -

1. பாடல் முழுதும் ஈரசைச் சீர்களே வரவேண்டும்.
விளச் சீர்கள் வருமிடங்களில் மாங்காய்ச் சீர்கள் அருகிவரலாம்.

2. அரையடி ஈற்றுச் சீரும் (3ஆம் சீர்) அடியீற்றுச் சீரும் (6ஆம்சீர்) மாச் சீராக (தேமா அல்லது புளிமா) அமைந்திருக்க வேண்டும்.

3. ஒவ்வோர் அரை அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
( அரையடி இறுதியும் அடுத்த அரையடி முதலும் இணையும் இடத்தில் வெண்டளை வரவேண்டிய கட்டாயம் இல்லை.)

3.முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

உன்னை யுகப்பன் குயிலே
.....உன்துணைத் தோழியு மாவன்
பொன்னை யழித்தநன் மேனிப்
.....புகழிற் றிகழு மழகன் 
மன்னன் பரிமிசை வந்த 

......வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன்
.....சீர்ப்புயங் கன்வரக் கூவாய்! - திருவாசகம் (குயிற் பத்து)

ஆ. இரண்டாம் வகை : 


1. ஓரடியில் உள்ள ஆறு சீர்களும் மாச்சீர்களாகவேஅமைந்திருக்க வேண்டும்.
2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.
3. முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.
4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித் தெழுதுவது மரபு.
5. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.
எடுத்துக்காட்டுப் பாடல் :
கருநா டகத்தார் செயலால்
.....கடற்கா விரியும் வறண்டு
ஒருவாய்த் தண்ணீர் இன்றி
.....உலர்ந்து தளர்ந்து போனாள்
திருவாழ் நிலங்கள் காய்ந்து
.....சீரும் சிறப்பும் மாறிக்
கரிந்த புல்லும் சருகும்
.....காணக் கண்கள் கூசும்.
இனி, இரண்டு வகையிலும் எழுதிப் பழகுவோம்.
குறிப்பு : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலங்களில் இக்காலத்தில் வழங்குவன நாம் படித்த ஏழு வகைகளே. வேறு வகைகள் பல இருந்தன வேனும், அவை கம்பர் காலத்திற்கு முன்னரே இறந்தன. கம்பர் காலத்தில் வழங்கிய மண்டிலங்களையே நம் முன்னோர், ஆயிர மாண்டுகளாக் கையாண்டு வந்தனராதலால், அவர்கள் சென்ற வழியில் செல்வதே மரபு.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 6

அடுத்த வகை அறுசீர் மண்டிலம், ஓரடியில்

குறிலீற்று மா+ விளம்+ மா
.....விளம்+ விளம்+ மா

என்று அமைந்து வரும் வகையாகும்.

இம் மண்டிலப் பாவில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித் தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து வரும். முதற் சீர் குறில் ஈற்று மாச் சீராக வரும்.
இரண்டு, நான்கு, ஐந்தாம் சீர்கள் விளச் சீர்களாக அமையும்.
மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மாச் சீராக வரும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்ககாட்டுப் பாடலைப் பார்ப்போம்:

நீல வண்டறை கொன்றை
.....நேரிழை மங்கையொர் திங்கள்
சால வாளர வங்கள்
.....தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலு ளானைக்
.....காவுடை யாதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
.....எம்மையு மாளுடை யாரே. – சுந்தரர் தேவாரம்.
இன்னொரு எளிய பாடல் :

கொடிய பிணிஎது என்றால்
.....குலைவுற நடுக்கிடும் பசியே
மிடியி னால்வரும் பசியால்
.....வீழ்ந்திடும் உயிர்களுக் களவோ?
ஒடியும் உயிர்களும் நம்போல்
.....உயர்வுள உயிரென எண்ணி
முடியும் மட்டிலும் உதவ
.....முன்வரல் உயர்தவம் அன்றோ! 
-அரங்க.நடராசனார்

இவ் வகை அறுசீர் மண்டிலம் எழுதலாமே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 5

அடுத்த வகை மண்டிலம் 'குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' வகையாகும்.

இம்மண்டிலப் பாவில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து வரும்.
முதற் சீர் குறில் ஈற்று மாச்சீராக வரும்.
இரண்டாம் சீர் கூவிளச் சீராக அமையும்.
மூன்று நான்கு ஐந்தாம் சீர்கள் விளச்சீர்களாக வரும்.
கடைசிச் சீர் மாங்காய்ச் சீராக வரும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

தயங்கவோ தளரவோ வேண்டா.

ஓர் எடுத்துக்ககாட்டுப் பாடலைப் புரிந்து கொண்டால், எளிதில் எழுதலாம்.

வாட கைக்கென வீடுகொ டுத்திடல்
..........வழக்கெனக் கண்டுள்ளோம்
வாட கைக்கென ஊர்திகள் விட்டதில்
.........வாழ்ந்திடும் வழக்குண்டு
வாட கைக்கென நூலகம் வைப்பதும் 
..........வந்தது சிலநாளாய்
வாட கைக்கிளம் பெண்டிரை விட்டுயிர்
..........வாழ்வதும் வாழ்வாமோ?

இப் பாடலில், முதற்சீராக வாட என்ற சொல்லே நான்கடிகளிலும் வந்துள்ளது. இப்படியும் வரலாம்; ஓரடியில் வாட என்றும் மற்ற அடிகளில் முதற்சீராகக்
கூட, பாட, ஓட, தேட, நாட என வெவ்வேறு சொற்கள் அமைத்தும் பாடலாம்.

'வாட' என்பதில் '' குறில்; ஆகவே, வாட என்பது குறில் ஈற்று மாச்சீர்.

அடுத்து வந்த கைக்கென கூவிளம்.

வீடுகொ, டுத்திடல், வழக்கென - மூன்றும் விளச்சீர்கள்

கண்டுள்ளோம் - மாங்காய்ச்சீர்.

நான்கடிகளும் இவ்வாறே அமைந்துள்ளன.

இப்பாடலை எழுதியவர் புதுவைப் பாவலர் அரங்க.நடராசன் ஐயா அவர்கள்.


இன்னொரு பாடல் :

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையென்
..........மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச்
..........சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை யாயினும்
..........நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது
.........கேட்கவுங் கில்லேனே. - ( திருவாசகம் -37)

தயங்காது எழுதத் தொடங்குக. எளிமையாகவும் அழகாகவும் எழுதுக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் - 4

அடுத்த வகை அறுசீர் மண்டிலத்தின் இலக்கணம் :

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து, முதல் ஐந்து சீர்கள் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) ஆறாவது சீர் மாங்காய்ச சீராகவும் ( புளிமாங்காய், தேமாங்காய்-இரண்டில் ஒன்று) அமைந்து வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

பசித்தால் மட்டும் புலியும் பிறவும்
..........பதறக் கொன்றுண்ணும்
பசியாப்போதும் திமிரால் கொல்லும்
..........பரிவொன் றில்லாரே
விசித்துக்கலங்கும் மாந்தர் கண்ணீர்
..........வீணாய்ப் போகாதே
நசிக்கும் ஒருநாள் நன்றாய் இதனை
..........நனவில் கொள்வீரே! 

இப்பாடலை எழுதியவர் புதுவைப் புலவர் அரங்க.நடராசனார் ஆவார்.

இந்த வகை அறுசீர் மண்டிலப் பா ஒன்று எழுதிக் காட்டுக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியமண்டிலம்- 3

அறுசீர் மண்டிலத்தில் அடுத்த வகையைப் பார்ப்போம் :

இவ் வகையில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து காய் + காய் + காய் + காய் + மா + தேமா என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

( காய் என்று குறித்துள்ள இடத்தில் கூவிளங்காய், புளிமாங்காய், தேமாங்காய், கருவிளங்காய் -இவற்றுள் எதுவும் வரலாம்; மா என்று குறித்துள்ள இடத்தில் தேமாவோ புளிமாவோ வரலாம். )

இதன் அமைப்பை 'நான்கு காய், ஒரு மா, தேமா' என்றும் கூறலாம்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
..........தெங்கும் காணோம்!

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
..........பான்மை கெட்டு 

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் 
..........நன்றோ சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
..........செய்தல் வேண்டும். 

இது பாரதியார் பாடல் என்று நாம் அறிவோம்.


இனி, பாவேந்தர் பாடல் ஒன்று :

கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே
..........கவின்செய் முல்லை

அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே
..........அன்பே கட்டி

இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை
..........ஈட ழித்து

வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல
..........வாய்ப தைக்கும்.


எழுதத் தொடங்குக.

முடியுமானால், உவமை போலும் அணி அமைத்து எழுதுக.

வெண்பாவை விட எளிதாக இவ்வகை மண்டிலங்களை எழுத முடியும் எனபதை நீங்களே உணரலாம்.

அறுசீர் மண்டிலம் - 2.

"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்" எனபதைச் சுருக்கமாக 'அறுசீர் மண்டிலம்' என்றும் அழைப்பர்.

அறுசீர் மண்டிலத்தில் அரை அடியில் மா+மா+காய் என்ற சீரமைப்பில் பாடல்கள் எழுதப் பயின்றோம்.

அடுத்த வகை அறுசீர் மண்டிலத்தை மூன்று வகையாக எழுதுகிறோம்.

ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம் :

(அ). முதல் வகை :

1. ஓர் அடியில் (மூன்று + மூன்று) ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர் நான்காம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித்தெழுதுவது மரபு.

5.நான்கு அடிகளும் அளவொத்து விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

நீரிடை யுறங்குஞ் சங்கம்
..........நிழலிடை யுறங்கும் மேதி
தாரிடை யுறங்கும் வண்டு
..........தாமரை யுறங்கும் செய்யாள்
தூரிடை யுறங்கும் ஆமை
..........துறையிடை யுறங்கும் இப்பி
போரிடை யுறங்கும் அன்னம்
..........பொழிலிடை யுறங்கும் தோகை. 

இது கம்பராமாயணம், நாட்டுப்படலம்- 6. பாடல்

இப் பாடலின் முதல் அரை அடி, நீரிடை யுறங்குஞ் சங்கம் (கூவிளம் +புளிமா + தேமா) என்று அமைந்துள்ளது.
முதலடியின் அடுத்த அரை அடி, நிழலிடை யுறங்கும் மேதி (கருவிளம்+ புளிமா+ தேமா) என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வாறே, அடுத்த மூன்று அடிகளிலும், முதற்சீர் விளச்சீராகவும் (கருவிளம் அல்லது கூவிளம்) இரண்டாம் சீர் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமாவாகவும் வருவதைக் காணலாம்.

இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுப் பாடல் :

அங்கவர் அடைப்பின் நீங்கி
. அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
. தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
. செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
. ஏன்வலி யுறுத்தா துள்ளார்? - த.ந.


(ஆ) இரண்டாம் வகை :

இவ்வகைப் பாடலில், அரை அடியில், முதற் சீர் முதல் வகைப் பாடலில் கூறிய வாறுவிளச் சீராக வரும் அல்லது அம் முதற் சீர் மாங்காய்ச் சீராகவும் வரும்.

அதாவது, அரைஅடியில் முதற்சீர் விளச்சீர் அல்லது மாங்காய்ச்சீர் (கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய் நான்கில் ஒன்று) இரண்டாம் சீர் மாச்சீர் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமா பெற்று வரும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

தண்டலை மயில்கள் ஆடத்
..........தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
..........குவளைக்கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
..........தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
..........மருதம்வீற் றிருக்கு மாதோ.. - கம்பராநாட்டுப். 4.

இப்பாடலில் 'கொண்டல்கள்', 'மருதம்வீற்' ஆகிய முதற்சீர்கள் இரண்டும் மாங்காய்ச் சீர்களாவும் பிற முதற்சீர்கள் விளச்சீர்களாகவும் அமைந்துள்ளதைக் காணலாம்.

(இ) மூன்றாம் வகை :

இவ்வகைப் பாடலில், அரை அடியில், முதற்சீர் மாங்காய்ச் சீராகவும் ( தேமாங்காய் அல்லது புளிமாங்காய்) இரண்டாம் சீர் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமாவாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
..........இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
..........துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில் 
..........மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
..........கால்வண்ணம் இங்குக் கண்டேன் - கம்பரா. அகலிகை.24.

பொறுமையாக, ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொன்றாக மூன்று வகையிலும்
அறுசீர் மண்டிலங்கள் எழுதத் தொடங்குக.

ஐயங்கள் இருப்பின் தயங்காது கேட்க.

ஓர் அரைஅடி எழுதிவிட்டால், பிறகு எளிதில் முழுப்பாடலும் எழுதிவிடலாம்.

எழுதத் தொடங்குக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்-1

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்குவகைப் பாக்கள் உள்ளன என்று முன்பே அறிந்துள்ளோம்.

இந் நான்குவகைப் பாக்களுக்கும் பாவினங்கள் உண்டு.

எடுத்துக்காட்டாக, ஆசிரியப்பாவின் பாவினங்கள் ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய மண்டிலம் என்பன ஆகும்.

எல்லாவகைப் பாவினங்களையும் ஒப்பிடுகையில், அதிகமாக எழுதப்படுவன ஆசிரிய மண்டிலங்களே ஆகும்.

ஆசிரிய மண்டிலம், ஆசிரிய விருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆறு சீர்களும் அதற்கும் மேலான சீர்களும் பெற்றுவரும் அடி, கழிநெடிலடி என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம்.

கழிநெடிலடி நான்கு அளவொத்து வருவது ஆசிரிய மண்டிலமாகும்.

ஆசிரிய மண்டிலங்களை ஒவ்வொன்றாக எழுதப் பழகுவோம்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் -1.

1. ஓர் அடியில் (மூன்று + மூன்று) ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர் நான்காம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித்தெழுதுவது மரபு.

5.நான்கு அடிகளும் அளவொத்து மா + மா + காய், மா+ மா+ காய் என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

ஆசிரிய மண்டிலம் எழுதுதல் மிகவும் எளிதாகும்.

இனி, எடுத்துக்காட்டுப் பாடல் :


வெய்யிற் கேற்ற நிழலுண்டு
..........வீசும் தென்றல் காற்றுண்டு 
கையிற் கம்பன் கவியுண்டு
..........கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
..........தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வனமன்றி
..........வாழும் சொர்க்கம் வேறுண்டா? 

இது, கவிமணி எழுதிய உமர்கய்யாம் பாடல்.

இப் பாடலின் முதல் அடி,

வெய்யிற் கேற்ற நிழலுண்டு (தேமா+தேமா+புளிமாங்காய்) என்றும்
வீசும் தென்றல் காற்றுண்டு (தேமா+தேமா+தேமாங்காய்) என்றும் இரண்டு அரை அடிகளாய் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வாறே, அடுத்த மூன்று அடிகளிலும், முதலிரண்டு சீர்களும் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் காய்ச்சீராகவும் ( நான்கு வகைக் காய்ச்சீர்களுள் ஒன்று) வருவதைக் காணலாம்.

முதல் அரை அடி எழுதிவிட்டீர்களானால் அதை வைத்தே பாடலை எழுதி முடித்து விடலாம்.

கன்னற் சாறே, கனியமுதே!
கருத்தில் இனிக்கும் தமிழமுதே!
என்னை மகிழ்ச்சிக் கடலாழ்த்த
இனிய மகளாய் வந்தவளே!
உன்னின் அறிவும் வளர்த்திடுவாய்!
ஒழுக்கம் அறங்கள் போற்றிடுவாய்!
இன்னா கொடுமை இவ்வுலகில்
இல்லா தாக்க எழுவாயே!

- இது த.ந.வின் பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக