செவ்வாய், 28 ஜனவரி, 2014

பாடம்18/20

பாடம்20 நிரல்படுத்து வெண்பாக்கள்!


பொருளின் பெயர்களையோ நூலின் பெயர்களையோ ஏனைய பெயர்ச்சொற்களையோ மக்களின் நினைவில் நிற்பதற்கென்று சில வழிமுறைகளைக் கையாள்கிறோம். அவற்றுள் ஒன்று வெண்பாவில் தொகைபடுத்துதல்.

ஓரின நூல்களை நினைவுகொள்ளவும் ஒன்றைப் படித்தபின் அடுத்ததைப் படிக்கவும் நூலகங்களில் இன நூல்களை வரிசைபடுத்தி அடுக்கவும் இப்பட்டியல் செய்யப்பட்ட வெண்பாக்கள் பயன்படும். பழநூல்கள் அழியாமல் பாதுகாக்கவும் நூல்பற்றிய ஆராய்ச்சிக்கும் இவ்வகை வெண்பாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.

காட்டு:-

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்! -பழம்பாடல்

இப்பாடலைப் பாருங்கள்:- வள்ளுவரின் திருக்குறளுக்கு முற்காலத்தில் யார்யார் உரைகண்டிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறது.

சக்கரவா கம்கிளிஆந் தைநாரை அன்னம்க
ரிக்குருவி கௌதாரி காடைஅன்றில் -கொக்கு
குயில்கருடன் காக்கைபுறா கோழிஇரா சாளி
மயில்கழுகு கோட்டான்வெள வால்! -அழகிய சொக்கநாத பிள்ளை

இப்பாடலில் பறவைகளின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்! -அகரம்.அமுதா

தென்னை விளாமுருங்கை தேக்கு பலாமூங்கில்
புன்னை அகில்களா பூவரசு -வன்னிகொன்றை
ஆலரசு பாக்கிலந்தை ஆத்தி கமுகுகரு
வேலம்மா வாழைபனை வேம்பு! -அகரம்.அமுதா

முன்னிரு வெண்பாக்களில் காய்கறிப் பெயர்களையும் மரங்களின் பெயர்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
பாத்திசேர் நல்வழி பண்புலகம் -பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்! -வ.சுப.மாணிக்கனார்

இவற்றைப்போல் நிரல்படுத்த வெண்பாக்களை நீங்களும் செய்துபார்க்களாம். சிறப்பாக வரும் வெண்பாவைப் பின்னூட்டத்தில் இடுமாறும் கோருகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "நாளை நமதென்றே நம்பு!"
அகரம்.அமுதா

பாடம்18 முடுகியல்!

Posted in 
பாவகை நான்கினுள் வெண்பா எழுதுதல் மிகக்கடினாகும். அதுபோல வண்ணப் பாடல்கள் செய்வதும் மிகக்கடினமாகும். புதுமையோடும் செழுமையோடும் வீறுநடைபோட்டு வரும் வெண்பாவில் புதுமை நோக்கோடு நம் பழம்புலவர்கள் வண்ணத்தைப் புகுத்தி வெண்பா இயற்ற முற்பட்டனர். இவ்வாறு வெண்பாவுள் வண்ண யாப்பு பயிலும் பாக்களை முடுகியல் வெண்பாக்கள் என்றழைத்தனர்.

முடுகியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவையாவன 1- முற்றுமுடுகியல் வெண்பா 2- பின்முடுகியல் வெண்பா.

முற்றுமுடுகியல்:-

மேகநிற மான்மருக வீறுதணி கேசவிது
வாகடின மேவுமிவ ளாவியருள் -வாகுவளை
நத்தத்தத் திற்பற்றி நச்சுப்பைக் குட்டத்து
நிர்த்தத்திற் கிச்சித்த நீர்! -யாரோ

இவ்வெண்பா முழுமுடுகு வெண்பாவாக அமைந்துள்ளமை நோக்குக.
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன –தானதன
தத்தத்தத் தத்தத்த தத்தத்தத் தத்தத்த
தத்தத்தத் தத்தத்த தா!

என்னும் வண்ணத்தைக் கொண்டியன்றது அப்பாடல்.

முற்றுமுடுகியல் வெண்பாவைக் காட்டிலும் பலராலும் பின்முடுகியல் வெண்பாக்களே அதிகம் பாடப்பட்டு வந்துள்ளது.

காட்டு:-
நடையூறு சொன்மடந்தை நல்குவதும் நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் -புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்
தானைமுகத் தானைநினைத் தால்! -புறப்பொருள் வெண்பா மாலை!

இவ்வெண்பாவை நன்கு உற்று நோக்குக. இறுதி இரண்டுவரிகள்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் தா! –என்னும் வண்ணத்தோடு முடிந்துள்ளமை காண்க.

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில் மனையிருக்கச் -சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு!

இப்பட்டினத்தார் பாடலை நோக்குக. இறுதி இருவரிகள் வல்லெழுத்துகள் மிகுந்து வண்ணத்துடன் அமைந்திருத்தல் காண்க.

அரங்கநாதக் கவிராயர் என்போர் பின்முடுகியலில் வேறோர் புதுமையையும் செய்துள்ளார். வெண்பாவில் முகன்மையாகப் பயின்றுவரும் வெண்டளையை நீக்கி வண்ணத்தோடு செய்திருப்பதே அது.

மையல்கொண் டாளுன்மீது வந்தணைவாய் இப்போதே
செய்யவள்சேர் திண்புயவி நாயகனே! -தொய்யில்
முலைபசத்து குழலவிழ்ந்து மொழிமறந்து விடவயர்ந்து
மலைவுகொண்டு நிலைமயங்கி மான்!

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. இறுதி இருவரிகளில் வண்ணம் பயிலலால் வெண்டளை நெகிழ்தலை.

இதுவோர் புறமிருக்க காளமேகப் புலவர் மேலுமோர் புதுமையைச் செய்துள்ளார்.வெண்பா முழுவதும் வல்லினம் மிகப் பாடுவதுதான் அப்புதுமை.

காட்டு:-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க -கைகைக்குக்
காக்கைக்கு கைக்கைக்கா கா!

தத்தித்தா தாதுதி தாதூதி தத்துதி
துத்தித் துதைதி துதைத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது!

இவ்விரு வெண்பாவும் முழுக்க முழுக்க வல்லினம் மிகுந்து வந்தமை காண்க. இதுபோல் மெல்லினம் இடையினம் மிகவும் பாடி அசத்தியுள்ளார்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மெய்யடா மெய்யடா மெய்!

அகரம்.அமுதா

பாடம்17 சவலை வெண்பா!

Posted in 
இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காணலாம்.
பொதுவாக (அளவியல் வெண்பாவைப் போருத்தவரை) 15சீர்கள் அமையப்பெறுதல் வேண்டும். 15சீர்கள் கொண்ட அளவியல் வெண்பாவில் ஒருசீர் குறைந்து 14சீர்களாகவோ ஒருசீர் கூடி 16சீர்களாகவோ வரின் அவ்வெண்பாவைச் சவலை (ஊனம்) வெண்பா என்பர்.

மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும் வருதல் வெண்பா வகுப்புமுறையாகும் (விதி). இவ்வகுப்பு முறைக்கு மாறாய்த் தளைகொள்ளும் வெண்பாக்களையும் சவலை வெண்பா என்பதே சரியாகும்.

காட்டு:-

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்!

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி!

இவ்விரு வெண்பாக்களையும் உற்று நோக்குங்கால் இடையில் விடுபட்ட இடத்தில் எவ்வொரு சொல்லையும் இட்டுநிரப்ப முடியாதாகையால் அவை சவலை வெண்பாக்கள் எனப்படும்.

சொற்செறிவு பொருட்செறிவு கரணியமாய் இதுபோன்ற வரையறையை மீறியவற்றையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால் தற்காலத்தில் இதுபோன்ற சவலை வெண்பாக்கள் புனைவது வழக்கொழிந்து போனதால் இதுபோன்ற வற்றை முயலவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இட்டவடி நோவும் இவட்கு!

குறிப்பு:-

"இட்டவடி நோகும் இவட்கு!" என எழுதுதல் வழுவாகும். "இட்டவடி நோவும் இவட்கு!" எனும் ஈற்றடிக்கு எழுத அனைவரையும் அழைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக