செவ்வாய், 28 ஜனவரி, 2014

1/6



4

பாடம்6 தொடை!



அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.



செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.

அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.
அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.

முதற்றொடை ஐந்து வகைப்படும்.

அவை:-
1-மோனைத்தொடை
2-எதுகைத்தொடை
3-முரண்தொடை
4-இழைபுத்தொடை
5-அளபெடைத்தொடை

மோனை யெதுகை முரணியை யளபெடை
எனுமிவை யைந்தும் முதற்றொடை யாமே! -என்பது தொல்காப்பியம்.

1-மோமைத்தொடை

இரண்டு அடிகளின் முதற்சீரின் முதலெழுத்து அல்லது ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றே வருவது மோனை எனப்படும்.

முதலெழுத் தொன்றுதல் மோனையாகும் -தொல்காப்பியம்

குறிப்பு:-

அடிகளில் வரும்மோனை அடிமோனை எனப்படும். ஓரடியிலுள்ள சீர்களில் வரும் மோனை சீர்மோனை எனப்படும்.

அடிமோனை:-

டித்தேன் அடடாவோ! பாக்களொவ் வொன்றுமொரு
டித்தேன் எனச்சொல்வேன் பண்பாய் -அடிநான்கில்
சீரேழும் ஒன்றும்பின் சீரேழும் ஒன்றிவர
நூரேழில் மூன்றில்லா நூல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதலடியின் முதலெழுத்தாகிய -வும் இரண்டாமடியின் முதல்எழுத்தாகிய -வும் ஒன்றி வருவதால் (ஒன்றிவருதல்-ஓரெழுத்தாதல்) இது அடிமோனை எனப்படும்.

சீர்மோனை:-

ரும்புவி யாங்கும் ருமிலக்கி யத்தில்
திருக்குறட்போ லுண்டோ திரு? ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் வந்துள்ள இஇ ஓரடியிலும் திதி ஓரடியிலும் வந்தமையால் இவை சீர் மோனை எனப்படும்.

2-எதுகைத்தொடை:-

இரண்டாமெழுத்தொன்றுதல் எதுகையாமே! -தொல்காப்பியம்.

அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ட்டிப் படைத்தே அறிவழிக்கும் -கூட்டினையே
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ? ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலிரண்டு அடிகளின் முதற்சீலரில் இரண்டாமெழுத்து ' ட்'என்றே வந்திருத்தல் எதுகை.மூன்றாம்நான்காம் அடிகளின் முதற்சீர்களின் இரண்டாமெழுத்தும் 'யி' ஒன்றிவந்து அவையும் எதுகையானது காண்க.

3-முரண்தொடை:-

முரணத் தொடுத்தல் முரண்தொடை யாமே –தொல்காப்பியம்

முரணுதல் -மாறுபடுதல். மாறுபட்ட சொற்கள் வருதல் முரண்தொடை எனப்படும்.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை
மண்தேடும் தாளின் அடி! ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் விண்xமண் என்பது முரண்தொடையாகும்.

குறிப்பு:-

மேல் கீழ்வெண்மை கருமைநீளம் குட்டை -இப்படி எதிர்மறையாக வரும் சொற்கள் முரண்தொடை எனப்படும்.

4-இழைபுத்தொடை:-

குறிப்பு:-இழைபுத்தொடை நமது வெண்பாவில் இடம்பெறாது என்ற காரணத்தால் இழைபுத்தொடைக்கான பாடம் தவிர்க்கப் படுகிறது.

5-அளபெடைத்தொடை:-

அளபெடுத் தொன்றுதல் அளபெடைத் தொடையே! -தொல்காப்பியம்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்! ---திருக்குறள்

'கடாஅ, படாஅ' என்று அளபெடுத்ததால் இது அளபெடைத்தொடையாகும்.

குறிப்பு:-

செய்யுளின் ஓசை நயத்துக்காகவும் தளை தட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஓர் சீரில் வருகிற நெடில் எழுத்தை அந்நெடில் தோன்றுவதற்குக் காரணமான உயிர்நெடிலின் இனமான குறிலை அந்நெடிலோடு இணைத்துக்கொள்வது அளபெடையாகும். அளபெடுக்கும்போது நெடில் மட்டுமே அளபெடுத்து வரும். குறில் அளபெடுக்காது.

எ.காட்டு:-

கடா -இச்சொல்லின் நெடிலெழுத்தாகிய 'டா' தோன்றக்காரணடான உயிரெழுத்து ஆ. ஆவின் குறில் அ அல்லவா? இக்குறிலை 'டா' வென்னும் நெடிலுக்குப் பின் சேர்த்துக்கொள்வது அளபெடை எனப்படும். கடாஅ என்று வந்தமை காண்க.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மலர்! -திருக்குறள்

இக்குறளில் ஓதல் எனும் சொல் அளபெடுத்து ஓஒதல் என வந்தமை காண்க.

ஓதல் வேண்டும் என்றுவந்தால் வெண்பா விதிப்படி தளை தட்டும் அல்லவா? ஆகையால் அளபெடுத்தமை அறிக.

அகரம்.அமுதா


பாடம்5 அடி!

சீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி
3-அளவடி
4-நெடிலடி
5-கழிநெடிலடி –என 5வகைப்படும்.

இருசீர் குறளடி முச்சீர் சிந்தடி
நாற்சீர் அளவடி ஐஞ்சீர் நெடிலடி
அறுசீர் முதலன கழிநெடி லடியே! -என்பது தொல்காப்பியம்!

நாம் கற்கும் வெண்பாவிற்கு அளவடியும் சிந்தடியும் போதுமானது என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1-அளவடி -ஓர்அடியில் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி எனப்படும். இவ்வளவடி நேரடி எனவும் பெயர் பெறும்.

2-சிந்தடி -ஓர்அடியில் மூன்று சீர்களைப் பெற்று வருவது. இச்சிந்தடி (வெண்பாவில்) வெண்பாவின் ஈற்றடியாக மட்டுமே வரும்.

எ.காட்டு:-

பொன்னைப் பொருளைப் புகழை மதியாமல்
அன்னைத் தமிழை அகமேற்றார்! -முன்னம்
தமிழர் புரிந்த தவத்தால் கிடைத்த
அமிழ்தாம் கலைஞர் அறி!

வந்த மொழிக்கெல்லாம் வாய்வீட்டில் வாழ்வளித்தே
சொந்த மொழிமாளச் சம்மதித்தோம்! -இந்தநிலை
மாற வழிகண்டார் மன்னுபுகழ் மாக்கலைஞர்
சீராள் செம்மொழியாய்ச் செய்து! -அகரம்.அமுதா

இவ்விரு வெண்பாவின் முதல் மூன்று அடிகளும் அளவடியாக வந்தமை காண்க. ஈற்றடியாகிய நான்காம் அடி மூன்றே சீர்களைப் பெற்று சிந்தடியாக வந்தமையையும் காண்க.

குறிப்பு:-

முதல் மூன்றடிகளும் அளவடியாகவும் நான்காமடியாகிய ஈற்றடி சிந்தடியாகவும் வரும். இருவே அனைத்து வெண்பாவிற்கும் உள்ள பொது விதி!

அகரம்.அமுதா

6

பாடம் 4 தளை!

சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். அத்தளைகள் 7வகைப் படும். ஆயினும் நம் வெண்பாவிற்கு இரண்டே தளைகள் தான் வேண்டும் என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1 இயற்சீர் வெண்டளை 2 வெண்சீர் வெண்டளை

தளை கொள்ளும்போது நின்றசீர் இன்னசீர் என்றும் (அதாவது) மாச்சீரா? விளச்சீரா? காய்ச்சீரா? என்றும் வரும்சீரின் முதலசை நேரசையா? நிரையசையா? என்றும் பார்க்கவேண்டும்.

குறிப்பு:-வருஞ்சீரின் முதலசை நேரசையா? நிரையசையா? என்று பார்க்கவேண்டுமே தவிர வருஞ்சீர் இன்னசீர் என்று பார்க்கவேண்டிய தில்லை.
நின்றசீர்-முதலில் உள்ள சீர்
வருஞ்சீர்-அந்நின்ற சீரோடு வந்து சேரும்சீர்.

எ.காட்டு:-

அமுதெனவே ஆனவளே! அன்னாய்!உன் சேய்நான்
அமுதா எனும்பேர்கொண் டார்த்தேன்! -குமுகாயம்
காணயெனைக் கையோடு கூட்டிப்போய்க் காட்டம்மா!
பேணுகிறேன் உன்னை பெரிது! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில்அமுதெனவே- நின்றசீர் (அதாவது முதற்சீர்)ஆனவளே- வருஞ்சீர் (அதாவது அடுத்தசீர்)

1.மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவ தியற்சீர் வெண்டளை யாகும்
2.காய்முன் நேர்வருவது வெண்சீர் வெண்டளை -என்பது தொல்காப்பியம்.

அமுதெனவே -அமு/தென/வே -நிரை/நிரை/நேர் -காய்ச்சீர்.-இக் காய்ச்சீர் முன் நேர் வரவேண்டும் அல்லவா?ஆனவளே- ஆ/னவ/ளே –நேர் நிரை நேர் –முதலசை நேரசை வந்துள்ளதல்லவா?

அடுத்து பாருங்கள். சேய்நான் -சேய்/நான் -நேர்/நேர் என்னும் தேமாமுன் நிரையசை வரவேண்டும் அல்லவா? வரும்சீர் அமுதா -அமு/தா நிரை/நேர் எனவந்து முதலசை நிரையசையானதைக் கவனிக்கவும்.

மேலும் சில எ.காட்டுக்களைப் பார்ப்போம்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்! - அகரம்.அமுதா

சொற்/சிலம்/பம் ஆ/டத் துணிந்/தேன் புடம்/போட்/ட
நேர்/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர்
கூவிளங்காய் தேமா புளிமா புளிமாங்காய்

பொற்/சிலம்/பம் போன்/றவ/ளே பூத்/துவா! -மற்/சிலம்/பம்
நேர்/நிரை/நேர் நேர்/நிரை/நேர் நேர்/நிரை -நேர்/நிரை/நேர்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளம் -கூவிளங்காய்

ஆ/டிப் பகை/வளர்க்/கும் ஆ/சை எனக்/கில்/லை
நேர்/நேர் நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர்/நேர்
தேமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்

பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!
தேமா கருவிளங்காய் நாள் -(நாள் வாய்பாடு-வெண்பாவின் ஈற்றில் வந்தமை காண்க)-இவ் எ.காட்டில் இரு இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வந்தமை காண்க.

நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றாமை தளை எனப்படும்.
அதாவது:- நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும் காய்முன் நேரும் வருவது.
இஃதேபோல் சில வெண்பாக்களைப் பிரித்துப் பார்க்கவும்.

அகரம்.அமுதா


பாடம்3 சீர்!

இரண்டாம் பாடத்தில் பார்த்த அசைகளில் அசைகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து வருவது சீர் ஆகும். அப்படி வரும்சீர் ஈரசைச்சீர் அல்லது மூவசைச்சீர் என இருவகைப்படும்.

1 ஈரசைச்சீர்

நேர் நிரை என்னும் இரு அசைகளையும் பெருக்கினால் (2x2-4) ஈரசைச்சீர்கள் கிடைக்கும்.

அவை:-

நேர் நேர் -தேமா
நிரை நேர் -புளிமா இவ்விரண்டுச் சீரும் மாச்சீர் எனப்படும்.

நிரை நிரை -கருவிளம்
நேர் நிரை -கூவிளம் இவ்விரண்டுச் சீரும் விளச்சீர் எனப்படும்.

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம்
எனுமிவை நான்கும் ஈரசைச் சீரே! -தொல்காப்பியம்

2- மூவசைச்சீர்
தேமா புளிமா கருவிளம் கூவிளம் நான்கினோடும் நேர் நிரை என்னும் இருஅசைகளையும் உழறினால் (பெருக்கினால்) (4x2-8) மூவசைச் சீர்களாகும்.

அவை:-

நேர் நேர் நேர் -தேமாங்காய்
நிரை நேர் நேர் -புளிமாங்காய்
நிரை நிரை நேர் -கருவிளங்காய்
நேர் நிரை நேர் -கூவிளங்காய் -என் நான்கு காய்ச்சீரும்

நேர் நேர் நிரை -தேமாங்கனி
நிரை நேர் நிரை -புளிடாங்கனி
நிரை நிரை நிரை -கருவிளங்கனி
நேர் நிரை நிரை -கூவிளங்கனி -என நான்கு கனிச்சீரும் கிடைக்கும்

குறிப்பு:-

நாம் காணவிருக்கும் வெண்பாப் பாடத்திற்கு மாச்சீர் இரண்டும், விளச்சீர் இரண்டும், காய்ச்சீர் நான்கும் மொத்தம் எட்டு சீர்களே தேவை என்பதால் கனிச்சீரை விட்டுவிடுவோம்.

இங்கே சில சொற்கள் தரப்பட்டுள்ளன. அசைபிரித்துப் பார்க்கவும். ஈரசைச் சீரா மூவசைச் சீரா என்பதையும் கவனிக்கவும்.

1.கணக்கு 2.கூப்பாடு 3.பண்பாடு 4.நல்லிணக்கம் 5.கட்டளை 6.இராக்கோழி 7.தண்ணீர் 8.பு+ம்புகார் 9.பாகற்காய் 10.செந்தமிழ்

குறிப்பு:-

சோல்லின் முதலில் ஐ-வரிசை எழுத்துக்களோ ஔ-வரிசை எழுத்துக்களோ வரின் அவ்வெழுத்துக்களை நெடிலாகத்தான் கொள்ளவேண்டும்.

எ.காட்டு:-

தையல் – தை/ யல் -இச்சொல்லில் ஐகாரம் சொல்முதலில் வருவதால் தை என்னும் எழுத்து நெடிலுக்குரிய இரண்டுமாத்திரைகளோடு வருவதைக் காண்க.

ஆனால் அதே ஐகாரமும் ஔகாரமும் சொல்லின் இடையிலோ கடையிலோ வரின் குறிலுக்கரிய மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். (தன் மாத்திரை அளவினின்றுக் குறைந்துவருவதால் இதனை ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் என்பர்)

எ.காட்டு:-

கையையெடு -கை /யையெ /டு இதில் கை ஓர் அசையாகவும் ‘யையெ’ என்னும் ஈரெழுத்தும் சேர்ந்து ஓர் அசையானதையும் காண்க. (ஔகாரம் சொல்லின் முதலிலன்றி சொல்லின் இடையிலும் கடையிலும் வராது. எனினும் ஔகாரத்திற்கும் பொருந்தும்)

கண்ணுடையார் -கண் ணுடை யார்
புண்ணுடையார் -புண் ணுடை யார்

காடைகௌதாரி -கா /டைகௌ/ தா /ரி என நான்கு அசைகளாக் பிரிந்தமை காண்க. ( ‘டைகௌ’ இவ்விரு நெடிலும் தன் மாத்திரை அளவிலிருந்துக் குறைந்துக் குறிலேபோல் வருவதைக் காண்க.)

இதுபோல் சில சொற்களைப் பிரித்துப்பார்க்கவும்.
1.தேனடை 2.கெண்டைமீன் 3. கொண்டைமுடி 4.கையுறை 5.கைப்பை

3.அசைச்சீர்

நேர் நிரை என்னும் இரண்டசையும் வெண்பாவின் ஈற்றில் தனிச்சீராக வரும். இதை அசைச்சீர் என்பர்.

எ.காட்டு:-

நேர் -நாள்
நிரை -மலர்

கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி
ஊனெடுத்த தேவன் உரு! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவின் ஈற்றுச்சீராகிய உரு -நிரையசையானதைக் காண்க தனியசையாக கவெண்பாவின் ஈற்றில் இச்சொல் வருவதால் அது மலர் என்னும் வாய்பாடெடுத்து வருவதறிக.

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் பார் என்கிற நேரசை வெண்பாவின் ஈற்றில் வருவதால் நாள் வாய்பாடெடுத்து வருவது காண்க.

என்போல் உழந்தார் இடர்?
என்றனுக் கிந்தநிலை ஏன்?
தாய்வழிப் பாட்டனைத் தான்! -இவ்வீற்றடிகளில் வரும் ‘இடர்’ ‘ஏன்’ ‘தான்’ போன்றவை நாள் அல்லது மலர் வாய்பாடெடுத்துவருதல் காண்க.


4.காசு, பிறப்பு!

முன்பு கண்ட நேரசை நிரையசைக் குரிய வாய்பாடாகிய நாள் மலர் என்னும் அசைகளோடு ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்ந்துவந்தால் நாள்- காசாகவும் மலர்- பிறப்பாகவும் மாறும்.

பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசையுகரத்தை நேர்பு என்றும் பிறப்பு என்னும் நிரையசையுகரத்தை நிரைபு என்றும் கொண்டனர்.

வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது! -அகரம்.அமுதா

-இவ் வெண்பாவில் ‘பெரிது’ என்னும் (நிரைபு) பிறப்பு வாய்பாடைக்காண்க.

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் நெஞ்சு என்னும் (நேர்பு) காசு வாய்பாடெடுத்தமை காண்க.


நேரசையுகரம் -நேரசையோடு (குசுடுதுபுறு) என்னும் வல்லின உகரம் சேர்ந்தது.
நிரையசையுகரம்- நிரையசையோடு வல்லின உகரம் (குசுடுதுபுறு) சேர்வது.

எ.காட்டு:-

பாடு காது ஊறு தேக்கு- நேரொடு வல்லின உகரம் சேர்ந்து (நேர்பு) காசு வாய்பாடெடுத்தல் காண்க.

கிழடு புணர்ந்து பிணக்கு விறகு நடாத்து நிரையொடு உகரம்சேர்ந்து (நிரைபு) பிறப்பு வாய்பாடெடுத்தல் காண்க.

நாள்மலர் காசு பிறப்பெனும் நான்கும்
வெண்பா வீற்றில் மேவிடுஞ் சீரே. -தொல்காப்பியம்

குறிப்பு:-

நாள் மலர் என்பன வெண்பாவின் ஈற்றில் அன்றி வேறிடங்களில் வரா. காசு பிறப்பு இவ்விரண்டும்; வெண்பாவின் இடையில் வந்தால் தேமா புளிமா எனக் கொள்ளவேண்டும். வெண்பாவின் ஈற்றில் மட்டுமே காசு பிறப்பாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக