புதன், 13 நவம்பர், 2013

நான்காம் தலைப்

பு : இறை வழிபாடு!

இந்தத் தலைப்பிலும் ஐவர் அழகுற எழுதியுள்ளனர்.

1. திரு. இரா. வசந்த குமார் எழுதிய மண்டிலம்.

(காய் + காய் + காய் + காய் +
மா + தேமா)

நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.

2. திருவமை. உமா எழுதியவை :

மா மா காய்
மா மா காய்

கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!

மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்காப் புகழைத் தான்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்கக்
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு

மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

கண்ணா அருள்வாயா?

குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை நேராய்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!
பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்)

பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினைப்
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!

நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!


3. திரு. அவனடிமை எழுதியவை :

குறுலீற்று மா+விளம்+மா+
விளம்+விளம்+மா

ஆன்ம உலகினுக் கரசர்
.......ஆண்டவ னெனப்பல ருரைப்பர்
உன்னுள் உருக்குலை யாதோர்
.......உணர்வினைக் காட்டுவே னென்பார்
உந்தன் உடல்பிணி யைத்தன்
.......உருக்கிடும் இசையினால் நீக்கி
உன்னுள் மூச்சிலே உயிரின்
.......உண்மையை உணர்ந்திடு வென்பார்!

ஏங்கும் சீடரும் மடமும்
.......ஏய்த்திடக் கூட்டுற வாகும்
பொன்னும் பெயருடன் பகட்டும்
.......பூவைய ரைப்புலன் புணர
கன்னம் தடவிடும் கணிகை
.......கனிவுடன் பணிவிடை புரிவாள்
இன்னும் பலயில வசமாய்
.......ஈர்த்திடும் இச்சையிற் திளைப்பார்!

அங்கி அறிவிழந் தோமென்
.......றரண்டுநா மழுதிட வேண்டா
இங்கிவ் வினவொளி மறைக்க
.......ஈசலா னந்தருக் காகா
தெங்கும் எப்பொரு ளுள்ளும்
.......எரிந்திடும் ஒளியினைக் காட்டும்
குன்றின் மேல்விளக் குலகின்
.......குறைகளும் அவன்திரு வருளே!

மா + மா + காய்
மா + மா + காய்

ஆன்மீ கத்தில் அரசாள
....ஆண்ட வன்போல் அவர்வந்தே
உன்னுள் உறையும் உருக்குலையா
....உணர்வே நானென் றுரைத்திடுவார்
எண்சாண் உடலிற் பிணிகளையும்
....இல்லா தாக்க இசைதொடுத்து
உன்மூச் சினைச்சீ ராக்கிடென
....உனக்கே உரைப்பார் அறிவுரையாய்!

ஏங்கும் சீடர் கூட்டணியும்
....ஏய்க்கும கூட்டம் பின்வரவும்
பொன்னும் பெயரும் பகட்டுடுப்பும்
....பெண்மை அழகும் புலன்புணர
கன்னம் தடவும் கணிகையுடன்
....கற்பாய்ப் பணிவன் போடிருப்பார்
இன்னும் இதுபோல் இலவசசிற்
....றின்பம் பலசேர்த் தனுபவிப்பார்

அங்கி அறிவோ டிழந்தோமென்
....றரண்டு நாமும் அழவேண்டாம்
கங்குல் இனப்பே ரொளியின்முன்
....கலையும் ஈசற் கூட்டமிது
என்றும் எங்கும் எவரிடமும்
....எரியும் ஒளியே எமதிறைவன்
குன்றின் மேலே விளக்கவந்தான்
....குறையும் அவன்பே ரருளன்றோ!

(காய்+காய்+காய்+காய்+
மா+தேமா)

நான்வேறு நீவேறு என்றில்லை பகுத்தறிவாய்
நாடில் ஒன்றே
நான்வேறு பிறர்வேறாய்த் தெரிகிறதே என்றுரைப்பார்
ஞாலந் தன்னில்
நான்நீயாய் அவரதுவாய்த் தோன்றுவதும் ஒருபொருளே
நாம்காண் தோற்றம்
மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
மரமே யன்றோ!

நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
நலமே நல்கும்
உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
ஒன்றாய்க் காணும்
நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணர்வு
நாணித் தோடும்
ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
ஒளிர்வா யன்பே!

4. திரு. திகழ் எழுதியவை :

மா+மா+காய்
மா+மா+காய்

உன்னுள் என்னுள் இருக்கின்ற‌
...இறையைப் புறத்தே தேடுகின்றோம்
பொன்னால் க‌ல்லால் உருவான‌
...சிலையை வ‌ண‌ங்க‌ச் செல்கின்றோம்
அன்பாய்ப் ப‌ண்பாய் இருக்கின்ற
...இறையை உண‌ர‌ ம‌றுக்கின்றோம்
உன்னைத் தேடி ப‌டைத்த‌வ‌னும்
...வ‌ருவான் அன்பைப் பொழிந்தாலே!

காவி உடுத்த சாமிக்கு
...எதற்குக் காசு பணமெல்லாம்
கூவி அழைத்து விற்பாரே
...கூறு போட்டு ஆண்டவனைப்
பாவி யாக்க பார்ப்பாரே
...பார்த்து நடந்து கொள்ளுங்கள்
ஆவி அடங்கும் முன்னாலே
...ஆசை செய்யும் ஆட்டமடா!

5. திரு. அண்ணாமலை எழுதியவை :

மா+ மா+ காய்
+மா+மா+காய்

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

அருமையாக மண்டிலங்கள் எழுதிய அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் உரித்தாக்குகின்றோம்.

அடுத்து, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதப் பயில்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக