திங்கள், 9 ஜனவரி, 2012

வஞ்சிப்பா


மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 20

வஞ்சிப்பா

வஞ்சிப்பாவின் இலக்கணம்:-

1. தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்று
கனிச்சீர் கொண்டு வரும்.
2. இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர் ஆகும்.
3. இவற்றோடு பிறசீர்களும் விரவி வரும்.
4. இப்பாடலுக்கு உரிய தளை வஞ்சித்தளை. இது இருவகைப்படும்.
அ) ஒன்றிய வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நிரையசை வருவது.
ஆ) ஒன்றாத வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நேரசை வருவது.
5. பிற பாடல்களுக்குரிய தளைகளும் பெற்று வரும்.
6. வஞ்சிப்பா தூங்கலோசை பெற்று அமையும்.
7. அடி வரையறை மூன்றடியாகும். இரண்டடியாகவும் வரலாம். இதற்கு மேல் எத்தனை
வேண்டுமானாலும் வரும்.


தூங்கலோசை:-
1. ஏந்திசைத் தூங்கலோசை
2. அகவல் தூங்கலோசை
3. பிரிந்திசைத் தூங்கலோசை

என மூன்று வகைப்படும்.

1. ஏந்திசைத் தூங்கலோசை
ஒன்றிய வஞ்சித்தளைகள் வருவது ஏந்திசைத் தூங்கலோசை ஆகும்.

எ.டு:-

உழவுத்தொழில் நனியாற்றிடும்
கழனித்துறை வளங்கள்பெறக்
கருத்தாய்வயற் களத்தேசெல
வெறுக்காநிதிப் பெருக்காகுமே.

2. அகவல் தூங்கலோசை
இது ஒன்றாத வஞ்சித்தளை வருவது. அதாவது கனிச்சீரையடுத்து நேரசை வரும்.
ஆனால் அனைத்தும் கனிச்சீர்களாகவே இருக்கும்.

எ.டு:-

கூவும்குயில் நன்றாகவும்
தாவும்மரை சார்ந்தோடவும்
மேவும்மயில் மெல்லேவர
யாவுமனை வாழ்வித்ததே.

3. பிரிந்திசைத் தூங்கலோசை
இதில் ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை இவற்றையல்லாது பிற தளைகளும்
வரும்.

எ.டு:-

ஏதமிலா எழிலசைய
மாதுமொரு முறத்தால்தனை
மோதுமொரு வேங்கையினை
மோதித்துரத் தினள் அன்றே.

இது வரை பாக்களைப் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் பார்த்தோம். பாக்களில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற உட்பிரிவுகளும் உண்டு. பிறிதொரு சமயம் வாய்க்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக அலசலாம். மரபுக்கவிதை எழுத விரும்பும் ஆரம்ப கவிஞர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேற்கொண்டு தங்களை வளர்த்துக்கொள்ள பழந்தமிழ் பாடல்களும், சுய பயிற்சியும் மிக உதவியாக இருக்கும். ஒவ்வொருவரும் முயற்சி செய்து பாக்களை எழுதவேண்டும் என்பதே என் அவா. மரபுக்கவிதை எழுதுவது ஒன்றும் கடினமான செயலல்ல என்பதினை இந்த பதிவு உணர்த்தியிருக்கும். எளிய வார்த்தைகளைக் கொண்டே மரபுக்கவிதை அமைக்கலாம்.
இலக்கணத்திற்காக பாடல் எழுதுவதை விட பாடலின் தன்மைக்கேற்ப இலக்கணம் பொருந்துவதே
சாலச் சிறந்தது.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 19

கலிப்பா

காய் முன் நிரை வருவது கலிப்பாவுக்கு உரிய இலக்கணம் ஆகும். இது மூவசைச்சீரில் வரும். காய் என்பது மூவசைச்சீர் ஆகும். நான்கசைச்சீரில் பூ முன் நிரையும் வரும்.

கலிப்பாவில் ஈரசைச்சீர்களான மாச்சீரும் விளச்சீரும், மூவசைச்சீரில் விளங்கனிச்சீர் எனப்படும் கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியனவும் வராது.

ஓசை நயத்தை வைத்து கலிப்பாவினை வகைப்படுத்துகிறார்கள். அவற்றைப்பற்றிக் காண்போம்.

கலிப்பா துள்ளலோசையுடையது. இது காய் முன் நிரையசை வருவது. அதாவது, மூவசைச்சீரையடுத்து நிரையசை வருவாதாகும்.

அருமறையின் நலம் விளங்க
** அவதரித்த ரகுராமா
பெருந்தவத்தின் அருள் விளங்கும்
** பெருமானே புவியமுதே
கருமுகிலின் பெருமழையே
** கலைமணியே கனிந்துறங்கு
திருமகனே எனதுயிரின்
** திகழமுதே தணிந்துறங்கு.

மேற்கண்ட பாடலில் காய்முன் நிரை வந்து கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பெற்றும், தேமா, புளிமா விளங்கனிச்சீர்கள் வராமலும் இருந்ததால் இது கலிப்பாவில் அமைந்ததாயிற்று.

ஓசை நயம்:-

கலிப்பாவிற்குரிய துள்ளலோசை மூவகைப்படும். அவை ஏந்திசைத்துள்ளல்,
அகவல் துள்ளல், பிரிந்திசைத்துள்ளல் என்பன.

1. ஏந்திசைத் துள்ளல்
இது, காய் முன் நிரை வருவது கலித்தளையாகும்.மேற்கண்ட பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

2. அகவல் துள்ளல்
இது, நிரையொன்று ஆசிரியத்தளை வருவது. அதாவது கூவிளத்தையடுத்து புளிமாங்காய் வருவது. இதனோடு கலித்தளையும் விரவி வரும்.

எ.டு:-

வண்டுறை நறும் பொய்கை
- வயமோங்கும் கமலத்தைக்
கண்டுறை திருமாதின்
_ கருணையிற் கலந்துறைய
மண்டுறை வறுமையெனும்
_ மதிகெட்ட கொடியவனும்
நுண்டுளிப் புனல் வெயிலில்
_ நுடங்குதல்போல் அழிந்தனனே.

3. பிரிந்திசைத் துள்ளலோசை

இதில் பல தளைகளும் விரவிவரும். அதாவது விளமுன் நேர் வந்து இயற்சீர் வெண்டளையும்,
காய்முன் நேர் வந்து வெண்சீர் வெண்டளையும் வரும். நிரையொன்று ஆசிரியத்தளை வரும்.
கலித்தளையும் வரும்.

எ.டு:-

அதியமான் நன்மனத்தில் ஔவையார் இனிதிருப்ப
நிதியெனக் கனியமுதாய் நெல்லியை உவந்தளிக்கத்
துதிபெறும் நற்றமிழின் ஏற்றத்தை இனிதறிந்து
மதிபெறும் மாந்தரெலாம் மகிழ்ந்தேத்த விழைந்தனரே

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 18

அளவடி வெண்பா

பொதுவாக வெண்பா என்றால் நான்கு அடிகளைக் கொண்டதாக விளங்கும். ஒரே அடியில் நான்கு சீர்கள் கொண்டு வருவது அளவடி எனக் கண்டோம். நான்கு அடிகள்
கொண்டு வரும் வெண்பாப் பாடல்களும் 'அளவடி வெண்பா' எனப்படும். இதனை அளவியல் வெண்பா எனவும் உரைப்பர். மூன்று அடிகளை உடைய வெண்பாப் பாடல்
சிந்தியல் வெண்பா எனப்பெறும்.

இன்னிசை வெண்பா

இதன் இலக்கணம் பின் வருமாறு:

1. முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகள் நான்கு சீர்கள் கொண்டு இருக்க வேண்டும். நான்காவது அடி மூன்று சீர்களுடன் அமையும்.

2. நான்காம் அடியின் ஈற்றுச்சீர், அதாவது மூன்றாவது சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டில் அமையவேண்டும். (காசு, பிறப்பு என்பது குற்றியலுகரம் எனவும், நாள், மலர் என்பது ஓரசையுடைய மாச்சீர், விளச்சீர் எனவும் காண்க.)

3. நான்கு அடிகளின் முதற்சீரிலும் இரண்டாவது எழுத்து ஒன்றி அடி எதுகை கொள்ள வேண்டும்.

4. மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் என்னும் விதியில் அமைய வேண்டும்.

5. பாடலுக்கு உரிய கருத்து ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஐந்து நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பின்னர் இன்னிசை வெண்பா அமைப்பது எளிது.

(எ.கா)

பூவளரும் காதல் பொருந்தும் குறிஞ்சியொடு
காவளரும் முல்லை கனிமருதம் நெய்தலென்றும்
தேவளரும் பாலையுடன் தேர்ந்து மொழிந்துளதே
மாவளரும் நந்தமிழர் மாண்பு.

அகத்திணை வகையில் காதல் வாழ்வில் மனம் ஒருமித்த தலைவனும், தலைவியும் இணைந்து மகிழ்வது குறிஞ்சி, உள்ளத்தால் ஒன்றி இருப்பினும் உடலால் சிறிது பிரிவு கொள்வது முல்லை. தலைவனின் பிரிவை ஆற்றாது தலைவி புலம்புதல் நெய்தல். தலைவன் தலைவியிடையேயான ஊடலும், பிரிதலும் மருதம் ஆகும். இத்தகைய நெறிமுறையை வகுத்து அவ்வாறு வாழ்வதே தமிழரின் மாண்பு என இன்னிசை வெண்பாவின் இலக்கணத்தில் கவிதை விளம்புகிறது.

நேரிசை வெண்பா

இது இன்னிசை வெண்பாப் பாடலினும் சிறிது மாறுபட்டு வரும். இதில் இரண்டாம் அடியின் நான்காம் சீர் தனிச்சீராக இருக்கும். மற்றபடி இன்னிசை வெண்பாப் பாடலுக்குரிய
இலக்கணமே இதற்கும் உண்டு.

இன்னிசை வெண்பாவில் நான்கு அடிகளிலும் முதற்சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி அடி எதுகை பெற்று வரும். நேரிசை வெண்பாவில் முதலடி முதற்சீரிலும் இரண்டாம் அடி முதற்சீரிலும், இரண்டாம் அடியின் நான்காம் சீராக உள்ள தனிச் சீரிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அதாவது முதல் இரண்டு அடிகளில் 'அடி எதுகை' பெறும். இரண்டாம் அடியில் 'ஒரூஉ எதுகை' பெறும். மற்றும் மூன்றாம் அடியின் முதற்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும் ஒரே எழுத்து கொண்டு அடி எதுகை பெறும்.

அவ்வாறு அமைந்த ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் நல்லுரையைப் புகழ்ந்து ஒரு கவிஞர் பாடிய பாடலொன்றைக் காண்போம்.

கண்ணன் திருநாமம் காலையிலும் செம்பவள
வண்ணன் தனிநாமம் மாலையிலும் - திண்ணமிகு
வாஞ்சையுடன் வாழ்த்துகவே என்றுரைத்த சங்கரனார்
காஞ்சிக்கு வாய்த்த கரும்பு.


மீள்பார்வை:-

ஈரசைச்சீரில் மாமுன் நிரையும், விளம் முன் நேரும், அதாவது ஒன்றாத தளை அமையும்படியும், மூவசைச்சீரில் காய் முன் நேர் வருவதும் வெண்பா ஆகும். அடிகளைப் பொறுத்தும் இசை நயத்தைப் பொறுத்தும் வெண்பாவை வகைப்படுத்தலாம். மூன்று சீர்கள் அமையுமாறு எழுதப்படுவது சிந்தியல் வெண்பா என்றும் ஒரு அடியில் நான்கு சீர்கள் வரும்படி எழுதுவது அளவடி வெண்பா எனவும் அழைக்கப்படும். அவற்றில், வெண்பாவின் இலக்கணத்தோடு இரண்டாம் அடியில் தனிச்சீர் பெற்று வருவது நேரிசை வெண்பா எனவும், தனிச்சீரின்றி வருவது இன்னிசை வெண்பா எனவும் அழைக்கப்படும்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 17

வெண்பா

பாடல்களில் வெண்பா வகை மிகச் சிறந்த வாய்ந்தவை. இத்தகைய வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா, ப·றொடை வெண்பா,
கலி வெண்பா என ஐந்து வகைப்படும். வெண்பாப் பாடல்களில் குறிப்பிட்ட கருத்தைக் கச்சிதமாகக் கூறலாம். திருக்குறள், நாலடியார், நளவெண்பா, முதலான நூல்கள்
வெண்பாப் பாடல்களால் ஆனவை.

8.1. குறள் வெண்பா

குறள் வெண்பா இரண்டு அடிகளையுடையது. முதல் அடி அளவடியாக நான்கு சீர்களும் இரண்டாவது அடி சிந்தடியாக மூன்று சீர்களும் கொண்டு வரும். இதற்கு உரிய
யாப்பிலக்கணம்

"மாமுன் நிரையும்
விளமுன் நேரும்
காய்முன் நேரும்
வருவது வெண்டளை"

என்பதாகும். ஈற்றுச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும். இதில்

ஈரசைச்சீர்: பிறப்பு என்பது புளிமா
ஓரசைச்சீர்: நாள் என்பது மாச்சீர் ( நேரசை)
ஓரசைச்சீர்: மலர் என்பது விளச்சீர் ( நிரையசை)

காசு என்பது நேர்பு எனவும், பிறப்பு என்பதனை நிரைபு எனவும் தொல்காப்பியம் சாற்றும்.


இனி, ஒரு குறள் வெண்பாவை எவ்வாறு அமைக்க வேண்டும் எனக் காண்போம்.

1. பொதுவாக, பொழிப்பு மோனை கொண்டு அமைத்தல் போதுமானது. ஏனையவான இணை மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் முற்று மோனையும் சேர்ந்து விளங்குமாறு பாடுவது கவிஞனின் விருப்பம். அடி எதுகை வந்தால் போதுமானது. ஏனைய எதுகைகள் கொண்டு அமைப்பதும் கவிஞனின் விருப்பம்.

2. வெண்பாவுக்குரிய தளை - அதாவது மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் வருதல் வேண்டும்.

3. ஈற்றுச்சீர் - குறள் வெண்பாவின் இரண்டாம் அடியில் வரும் மூன்றாம் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.

4. இப்போது கருத்து மட்டும் உருவாக வேண்டும்.

கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி. கானகம் சென்ற இராமன், பரதன் வேண்டுகோளை ஏற்று நாடு திரும்ப மறுக்கிறான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்தபின்னர் வருவதாகக் கூறுகிறான். எனவே, பரதன் இராமனின் பாதுகையைப் பெற்று அதற்குப் பட்டம் சூட்டிப் பணிகின்றான். அப்போது பரதன் தன் தாயான கைகேயின் வரத்தால் இவ்வாறு ஏற்பட்டதே என்று கலங்குகின்றான். இது ஒரு குறள் வெண்பாவாக வடிவம் கொள்கிறது.

மாது வரத்தால் மயல்சேர வாடினனே
பாதுகையைப் பார்த்துப் பணிந்து

இப்பாடலில்,

1. மாது - தேமா - நேர் நேர்
2. வரத்தால் - புளிமா - நிரை நேர்
3. மயல்சேர - புளிமாங்காய் - நிரை நேர் நேர்
4. வாடினனே - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
5. பாதுகையைப் - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
6. பார்த்துப் - தேமா - நேர் நேர்
7. பணிந்து - புளிமா - நிரை நேர் இது பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் வந்தது.

முதலடியில் நான்கு சீர்களும் ம, வ என்ற ஓரின மோனை வந்து முற்று மோனையாயிற்று.
இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் 'ப' என்பது மோனையாக வந்து கூழை மோனையாயிற்று.
இது சிந்தடியாதலால் முற்று மோனையும் ஆம்.

மா'து'
பா'து'கையைப்
- து என்பது அடி எதுகை.

மாமுன் நிரையும், காய் முன் நேரும் வந்து வெண்பாவிற்குரிய இலக்கணம் அமையப்பெற்றது.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 16

அகவற்பா : -

இது ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடியாக வந்து ஈற்றடி
ஈ , ஏ , ஓ , ஆய் , ஐ , அன் என முடிவுறும் .

( எ . க ¡ )

மஞ்சள் வானம்

கொஞ்சும் தோகை

விஞ்சும் அழகு

தஞ்சம் மனமே


நிலை மண்டில ஆசிரியப்பா : - 

எல்லா அடிகளும் நான்கு சீர்கள் கொண்டு ஈற்றடி " ஏ " , " என் " என்னும் ஈறு கொண்டு முடியும் .

( எ . க ¡ )

சீலமார் செல்வச் செழிப்புடன் மேவி

ஞாலமார் அறங்கள் நாட்டினில் திகழ

வள்ளுவர் காட்டும் வகையில் மகிழ்ந்து

தெள்ளிதின் வாழி ! திருவார் நிலத்தே!


இணைக்குறள் ஆசிரியப்பா : -

ஆசிரியப்பாவின் இடையில் இரண்டு சீர்களையுடைய குற ளடி நிரவி வருவது
இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் .

( எ . க ¡ )

தங்கும் இன்பம் நிறையப் பெற்று

எங்கும் இருக்கும் இறையே போற்றி !

கங்கை விடுத்து

எங்கள் தாகம் தீர்ப்பாய் போற்றி !

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 15

பாக்கள் நான்கு வகை:-

1. ஆசிரியப்பா
2. வெண்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா

ஒவ்வொன்றிலும் துறை, தாழிசை, விருத்தம் என்று மேலும் மூன்று இனங்கள் உள்ளன. இவற்றுள் இக்காலத்தில் ஒரு சில மட்டுமே வழக்கத்தில் உள்ளன. கட்டளைக்கலித்துறை,ஆசிரியப்பா, வெண்பா ஆகியவற்றைப் புலவர் பெருமக்கள் விரும்பித் தேர்ந்து பாடல்களை புனைகிறார்கள். சிலர் ஆசுகவிகளாக பாடவும் செய்கிறார்கள். சிலர் தடையின்றி எழுத்து வடிவத்தில் அமைத்துப் படிக்கிறார்கள்.

அருளாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார்,
ஸ்ரீ ஆண்டாள், திருமங்கையாழ்வார், குல சேகர ஆழ்வார், நம்மாழ்வார் முதலானவர்கள் இறைவன் அருளால் தாமாகவே பாடினார்கள் என்பதை வரலாறுகள் உரைக்கின்றன. அபிராமி அந்தாதி பாடப்பட்ட விதம் அம்பிகையின் அருள் தன்மையை இயம்புவதாக அமைந்தது.

சான்றோர்கள் தமிழ்ப்புலமை பெற்றுப் பாடிய பாடல்களும் ஏராளம். சங்க காலப் பாடல்கள்
அனைத்தும் அவ்வண்ணமே ஆயின.

எனவே, கவிதைப் புனைய இனிய கருத்தும் அமுத தமிழும் போதுமானது. அதை எளிமையாகவும் அதே சமயத்தில் மரபு தவறாமலும் புனையவேண்டும். அதற்கு இப் பாவகைகள் மிக உதவியாயிருக்கும்.

சரி, முதலில் ஆசிரியப்பாவைப் பற்றிப் பார்ப்போம்.

ஆசிரியப்பா

ஆசிரியப்பா என்பது ஆசிரியர் ஒருவர் மாணவருக்குச் சொல்லும் வகையில் அமைந்ததாகும். நாம் பேசுகின்ற அமைப்பில் இப்பாடல்கள் விளங்குதல் வேண்டும். அதுவே படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை பயக்கும். இதற்கு அடிப்படையாக நாம் கைக் கொள்ள வேண்டிய தளைகள் பின்வருவன:

1. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை
2. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை
3. இயற்சீர் வெண்டளை

இந்த மூன்றுத் தளைகளைப் பற்றியும் நாம் தளைகள் பாடத்தில் படித்திருக்கிறோம் என்பதை
நினைவுக் கூர்க!

1. நேர் ஒன்றிய தளை - நேர் முன் நேர் வரும்
2. நிரை ஒன்றிய தளை - நிரை முன் நிரை வரும்
3. இயற்சீர் வெண்டளை - மாறி மாறி வரும். அதாவது, நேர் முன் நிரையும், நிரை முன் நேரும் வரும்.

ஞாபகம் வந்ததா?

குறிப்பு: ஆசிரியப்பாவில் கவிதை புனைவது மிக எளிது. ஏனெனில் அசைகள் ஒன்றாக
( நேர்- நேர், நிரை- நிரை) வந்தாலும், வெவ்வேறாக வந்தாலும் ( நேர் - நிரை, நிரை - நேர்)
தளை தட்ட வாய்ப்பே இல்லை. ஆனால் ஈரசைச்சீர்க்கு மேல் வராது. அதாவது காய், கனி,
பூ, நிழல் சீர்கள் வராது; எனில் புனைவது எளிது தானே!

மாச்சீர்(நேரில் முடியும் சீர்), விளச்சீர் (நிரையில் முடியும் சீர்) ஈரசைச் சீர் என்பதை நினைவுக்
கூர்க! அதாவது ஒரு சீரில் இரண்டு அசைகள் இருக்கும். நேர் அசையில் அச்சீர் முடியப்பெற்றால்
மாச்சீர் ஆகும். நிரை அசையில் அச்சீர் முடியப்பெற்றால் விளச்சீர் ஆகும். மேலும் விளக்கத்திற்கு
முன் பாடங்களைக் காண்க!

சரி.. இனி ஆசிரியப்பாவின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

நேரிசை ஆசிரியப்பா:-

இவ்வகையானது ஆசிரியப்பாவின் தளைகளுடன் (மா முன் நேர், விளம் முன் நிரை, மாமுன் நிரை, விளம் முன் நேர்) எல்லா அடிகளும் நான்கு சீர்களாய்(அளவடி) அமைந்து ஈற்றயலடி அதாவது கடைசி அடிக்கு முந்தைய அடி முச்சீராக அமைந்து ஈற்றடி 'ஏ' காரத்தில் முடிந்தால் அது நேரிசை ஆசிரியப்பா ஆகும். பொதுவாக ஆசிரியப்பா குறைந்தது 3 அடிகளாவது அமையும்.

எ.டு:-

நீல மேனி வாலிழை பாகத்து
---- ----- --------- --------
1 2 3 4

ஒருவன் இருதாள் நிழற்கீழ்
-------- -------- --------
1 2 3

மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே
-------- ------- ----------- ---------
1 2 3 4


இப்பாடலானது ஆசிரியப்பாவின் இலக்கணத்துடன் மூன்றடிகளில் வந்துள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களாய்-அளவடியாய் அமைந்து ஈற்றயலடி மட்டும் முச்சீராயும், ஈற்றடி முறையே என 'ஏ' காரத்தில் முடிந்ததால் நேரிசை ஆசிரியப்பா ஆயிற்று.

எ.கா:-

ஈரசைச் சீர்கள் மாவும் விளமும்
ஆகிய நான்கும் தெரிந்தால்
ஆசிரி யப்பா புனைதல் எளிதே!

(நேரிசை ஆசிரியப்பாவில் எழுதியது)

ஆஹா! எவ்வளவு எளிமையாக உள்ளது. இது நானே எழுதியது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்த பாகத்தில் பிறவகைகளையும் பார்க்கலாம்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 14

6.4. மென் தொடர்க் குற்றியலுகரம்:-

இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்

இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.


6.5. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:-

இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.

இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.

6.6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் 

இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

அ·து + இல்லை = அ·தில்லை

இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

மீள் பார்வை:-

இப்பாகத்தில் குற்றியலுகரமானது நிலை மொழி ஈற்றில் கு,சு, டு, து, பு, று என்ற உகர எழுத்துக்கள் வந்து அவை நிலைமொழியின் முதல் எழுத்தில் உள்ள உயிருடன் இணைவதால் 'உ' கரம் ஓடி தனது இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் என்றும் அவற்றில் நெடில் தொடர்க் குற்றியலுகரம், வன், மென், இடைத்தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகியன வரும் என்றும் பார்த்தோம்.

குறிப்பு:-

நெடில் தொடர்க்குற்றியலுகரம் போல குறில் தொடர்க்குற்றியலுகரம் ஏன் வரக்கூடாது என்ற ஐயம்
ஏற்படக்கூடும். கீழே உள்ள எடுத்துக்காட்டுகளை கவனிக்கவும்.

மிகு, பசு, மடு, மது, தபு, மறு - இவையெல்லாம் குறிலை அடுத்து உகரம் வரும் சொற்களுக்கு உதாரணங்கள். ஆனால் இவை குற்றியலுகரமாகாது.

ஆனால் உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் விறகு, மரபு போன்ற சொற்களுடன் ற, ர அடுத்து முறையே 'கு', 'பு' வந்த போதும் அவற்றை குறில் தொடர்க்குற்றியலுகரமாகக் கருதுவதில்லை. உயிர்த் தொடர்க் குற்றியலுகரமாகவே கருதுகிறோம்.

குற்றியலிகரம்

உகரம் திரிந்து இகர முறும்
யாகாரம் சேர்ந்து வந்து
(வெண்பாவில் எழுதியது)

உகர எழுத்துக்களின் முன்னே வருமொழியின் முதலில் 'யா' எழுத்தானது வந்தால்
நிலைமொழியின் உகரம் திரிந்து இகரமாகும். இதுவும் குற்றியலுகரத்தைப் போன்று
தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

எ.டு:-

நாடு + யாது = நாடியாது

இங்கே நிலை மொழியின் ஈற்றில் 'டு' விலுள்ள 'ட்+உ' உகரமானது வருமொழி 'யா' உடன் இணைந்ததால் 'ட்+இ' என்று திரிந்து "நாடியாது" ஆனது. எனவே தனது மாத்திரையிலிருந்து குறைந்து ஒலித்து குற்றியலிகரம் எனப்பட்டது.

எ.டு:-


வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல். [

இங்கே உள்ள வெண்பா பாடலை நோக்குக.

மா முன் நிரையும், விளம் முன் நேரும், காய் முன் நேரும்
ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய்
கடைசிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என முடிதல்
வெண்பாவின் இலக்கணம் ஆகும்.

ஆனால்
எனப் படு வ = நிரை நிரை நேர் = கருவிளங்காய்
தியா தெனின் = நிரை நிரை

எனவே காய் முன் நிரை வந்து தளை தட்டியது எனல் கூடாது.

இங்கே எனப்படுவது + யாதெனின் = எனப்படுவதியாதெனின் = எனப்படுவ தியாதெனின்
என்று குற்றியலிகரம் வந்ததால், அதாவது நிலைமொழியின் (எனப்படுவ'து') ஈற்றிலுள்ள
உகரமானது வருமொழி('யா'தெனின்) 'யா' உடன் இணைந்து உகரம் கெட்டு இகரம்
('தி'யாதெனின்) என்று குறைந்து ஒலித்ததால் 'தி' ஆனது தனது ஒரு மாத்திரை அளவில்
இருந்து 1/2 மாத்திரையே பெற்றது. ஆகவே

'தி'யா தெனின் = நேர் நிரை என்றே கொளல் வேண்டும். எனவே இலக்கணப்படி
கருவிளங்காய் முன் நேர் வந்து தளை அமைந்தது.

இதிலிருந்து, குற்றியலிகரம் எப்போது வரும் என்பதும், குற்றியல் உகரத்திற்கும் - இகரத்திற்கும் உள்ள வேறுபாடும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த பாகத்தில் பா வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 13

அளபெடை மாத்திரை நீட்டிக்கச்செய்யும்
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் மாத்திரை குறையச்செய்யும்.

மாத்திரை நீட்டல் அளபெடை வேலை
குற்றிய லுகரமும் குற்றிய லிகரமும்
அவ்வாறு மாத்திரை குறைக்கும்
இப்பா கத்தின் விளக்கம் இதுவே
- (நேரிசை ஆசிரியப்பாவில் எழுதியது)

குற்றியலுகரம் 

'உ' கரம் என்ற உயிர் எழுத்து ஏனைய மெய்யெழுத்துக்களோடு சேர்ந்து வரும்போது அதனை நிலைமொழியாகக் கொண்டு வருமொழி உயிரெழுத்தை முதலாகக் கொண்டு வந்தால் ஏற்படும் மாறுதலை உரைப்பதாகும். அத்தன்மையில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள உகரம் கெடுகிறது. வருமொழியில் உள்ள உகரம் நிலை மொழியில் உள்ள மெய்யெழுத்தோடு சேர்கிறது. இதனால்
உகர எழுத்தின் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கிறது. இதுவே குற்றியல் உகரம் எனப்படும். இதற்கு 1/2 மாத்திரை என்க.

இதனை உரை நடையில் எழுதும்போது எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆனால் கவிதைகளில் வரும்போது இத்தகைய குற்றியலுகரத்தால் ஒரு மாத்திரையானது குறைந்து ஒலிப்பதால் தளை தட்டும். ஆதலாம் அத்தகைய குறைபாடு உண்டாகாதவாறு காத்துக் கொள்ள இதைப்பற்றி விரிவாக உரைக்கவேண்டியதாயிற்று.

நன்கு தேர்ந்தவர்களுக் இத்தகைய குற்றியலுகரத்தைக் கையாளும்போது கவனமாகவே
இருப்பர். இத்தகைய குற்றியலுகரத்தைப் பற்றித் தொல்காப்பியமும் உரைக்கிறது. நன்னூலும்
உரைக்கிறது. எனவே, குற்றியலுகரத்தைப்பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் பார்ப்போம்.

உகரம் எப்போது குறுகுகிறது?

க், ச், ட், த், ப், ற் என்கிற மெய் எழுத்துக்கள் உகரத்தோடு சேர்ந்து முறையே
கு, சு, டு, து, பு, று என ஆகிறது. இவ்வெழுத்துக்களைக் கொண்டு முடியும் உயிர் எழுத்துக்கள்
வரும்போது உண்டாகும் குற்றியலுகரப் புணர்ச்சியால் உகரம் குறுகி ஒலிக்கிறது. இதனால்
கவிதையில் தளை தட்டும்.

குற்றியலுகரத்தின் வகைகள்:-
குற்றியலுகரம் ஆனது புணரும் நிலைமொழியின் ஈற்றயல் எழுத்தின் தன்மையைப் பொறுத்து

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
3. வன் தொடர்க் குற்றியலுகரம்
4. மென் தொடர்க் குற்றியலுகரம்
5. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு:-
'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு

இங்கே நா, கா, மா, மா, பே, ரா என்ற நெடில் எழுத்துக்களை அடுத்து முறையே
கு, சு, டு, து, பு, று என்ற உகர எழுத்துக்கள் வந்துள்ளன. இனி இவை எப்படி
குற்றியலுகரமாகின்றன என்று பார்ப்போம்.

எ.டு 1:-
'காசு' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது 'இல்லை' என்ற சொல்லுடன்
இணைந்து 'காசில்லை' என்ற குற்றியலுகரத்தைத் தருகிறது.

கா | சு + இல்லை = காசில்லை
க்+ஆ | ச்+உ + இ ல்லை = கா ச்+இ ல்லை ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)

குறிப்பு:-
'காசு' என்பது 'காசி' என்று மாறியதால் அதை இகரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உகரம் கெட்டு தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்ததால் குற்றியலுகரமே ஆகும். மேலும் குற்றியலுகரமானது நிலை மொழி திரிவதால் மட்டுமே உண்டாகிறது; வரும் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குற்றியலுகரத்திற்கும் குற்றியலிகரத்திற்கும் உள்ள வேறுபாட்டை பின் வரும் பகுதிகளில் ஆய்வு செய்வோம்.

எ.டு 2:-

மா | டு +அல்ல = மாடல்ல
ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)

'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.

6.2. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:-

இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.

அரசு + ஆட்சி = அரசாட்சி

நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

6.3. வன் தொடர்க் குற்றியலுகரம் :-

இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

பட்டு + ஆடை = பட்டாடை

இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 12

5.7. அந்தாதித் தொடை

ஓரடியின் ஈற்றுச் சீர் அடுத்த அடியின் முதற்சீராக வருது அந்தாதித் தொடையாகும். ஒரு பாடலின் ஈற்றுச் சீர் அடுத்த பாடலின் முதற்சீராக வரும் நூல்கள் பல உள்ளன. கந்தர் அந்தாதி, அபிராமி அந்தாதி, சிவபெருமான் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி முதலான பல நூல்கள் உள்ளன.

எ.டு:-
மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
வாங்கும் கதிரோனைத் தாங்கும் எளியோனே
தாங்கும் எளியோரால் வாழும் புவியோரே

இதில் முதலடியின் ஈற்றுச்சீர் அடுத்த அடியின் முதற்சீராக வந்ததைக் காணலாம். இது
அந்தாதித் தொடையாகும்.

எ.டு:-

ஆன்ற நற் காலைக் கதிரவன் தோன்றினான்
தோன்றிய காலைத் தூங்கிருள் அகன்றது
அகன்ற இருளால் கடிமலர் மலர்ந்தது
மலர்ந்ததா மரையை மங்கை கண்டனள்
கண்டநன் மங்கையின் கவின்முகம் பூக்க
பூத்தது முகமோ புதுமலர் மன்னோ!

இதில் முதலடியில் வந்த ஈற்றுச் சீர் இரண்டாம் அடியில் முதற் சீர் கொண்டு வந்தது.
இத்தன்மையில் மூன்றாம் அடியும், நான்காம் அடியும், ஐந்தாம் அடியும் ஆறாம் அடியும் வந்து
அந்தாதித் தொடயாயிற்று.

5.8. செந்தொடை 

இதுவரை நாம் கண்ட தொடைகளான மோனை, எதுகை, இயைபு, அளபெடை, இரட்டை,
முரண், அந்தாதி இவை யாவும் இன்றி ஒரு கவிதை அமையுமானால் அது செந்தொடையின் பாற்படுவதாகும்.

எ.டு:-

வாகை சூடிய இளைஞர்கள் எல்லாம்
அவரவர் சால்பு தோன்றச்
செம்பொருள் கண்டு மகிழ்ந்தனர் நன்றே.

இப்பாடலில் எதுகை இல்லை. மோனையும் இல்லை. மற்றும் மொழியப்பட்ட வேறு தொடைகளும் இல்லை. எனவே இத்தன்மையில் முற்கூறிய ஏழு தொடைகளில் எதுவும் வராது செந்தொடை ஆனது.

இதன் நோக்கமானது ஒரு கவிதையில் கூறப்படும் கருத்துக்களை எவ்வாறேனும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதும் அத்தகைய கவிதைகளை யாப்பு இலக்கணத்தைக் காட்டித் தள்ளிவிடக் கூடாது என்பதும் ஆகும். இதனையே யாப்பருங்கலக் காரிகை ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தியுள்ளார். தற்போது வழங்கி வரும் பெரும்பாலான புதுக்கவிதைகள் இத்தகைய தொடையழகுடன் விளங்குகின்றது எனில் மிகையாகாது.

இதுவரை யாப்பின் உறுப்புக்களைப் பற்றிப் படித்தோம். அதில் மிக முக்கியமாக அறிந்துக் கொள்ளவேண்டிய எழுத்தின் வகையான குற்றியலுகரத்தைப் பற்றி அடுத்த பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 11

5.5. அளபெடைத் தொடை

ஒரு பாடலின் அடியில் உயிர் எழுத்தோ அல்லது ஒற்றெழுத்தோ
அளபெடுத்து வருவது அளபெடைத் தொடையாகும். இதுவும் முன்னர்க் கூறப்பட்ட
தொடைகளைப் போன்று,

1. இணை அளபெடைத் தொடை
2. பொழிப்பு அளபெடைத் தொடை
3. ஒரூஉ அளபெடைத் தொடை
4. கூழை அளபெடைத் தொடை
5. மேற்கதுவாய் அளபெடைத் தொடை
6. கீழ்க்கதுவாய் அளபெடைத் தொடை
7. முற்றளபெடைத் தொடை

என ஏழு வகையாகும்.

உயிர் அளபெடை

எ.டு:-
யானை வெரூஉ புலிதாக் குறின்.

இங்கே 'உ' என்ற உயிர் எழுத்தானது 'ரூ' எனும் 2 மாத்திரை அளவுடைய நெடிலுடன் இணைந்து
3 மாத்திரை அளவாக ஒலித்து உயிர் அளபெடை ஆயிற்று.

குறிப்பு:-
இதை 'வெரூ' 'உ' என்று பிரித்து வாசிக்கக்கூடாது. வேரூஉ என்பது ஒரே சீர் ஆகையால்
'உ' என்பதை மட்டும் இன்னும் சற்று நீட்டித்து வாசிக்க வேண்டும்.

ஒற்றெளபெடை:-

எ.டு:
எங்ங்கே, அம்ம்பு

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் உயிர் அளபெடையை உருவாக்க இயலுவதைப் போல மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தத்தம் ஒலியில் நீட்டித்து வருவதை ஒற்றெளபெடை என்கிறோம். இவை பொதுவாக தளை கணக்கிற்காக மிக அரிதாகவே எடுத்துக்கொள்ளப்படுவதாலும் தற்கால வழக்கத்தில் அவ்வளவாக இல்லாததாலும் அடுத்த தொடையினைப் பற்றிப் பார்ப்போம்.

5.5. இரட்டைத் தொடை:-

ஓரடியில் வந்த சொல்லே மீண்டும் அடுத்து வரும் அடியில் வருவது இரட்டைத் தொடையாகும்.

எ.டு:-
பல்சான் றீரே! பல்சான் றீரே!
பயன்இல் மூப்பிற் பல்சான் றீரே!

இத்தகைய தொடை நாடக நடையில் பெரிதும் கையாளப் படுகிறது.

குறிப்பு: ஒரே அசை சேர்ந்தார்ப்போல் வருவது இரட்டைக்கிளவி ஆகும். ஒரே சொல் சேர்ந்தார்ப் போல் வருவது அடுக்குத்தொடர் ஆகும். ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் மேற்கூறிய ஏழுவகைகளில் (இணை, பொழிப்பு... இப்படியாக)வருவது இரட்டைத்தொடை ஆகும்.
ஒரே சொல் அல்லது அசை ஈற்றில்(கடைசியில்) மேற்கூறிய ஏழுவகைகளில் வருவது இயைபுத் தொடை ஆகும்.

இயைபு பொருள் தரவேண்டிய அவசியம் இல்லை. தந்தாலும் தவறில்லை. இரட்டைத்தொடை இரட்டையாக வந்து பிற அடிகளிலும் மீண்டும் வரும். இது பொருள் தரும் சொல்லாகவே இருக்கும்.

இரட்டைக்கிளவி ஒலி நயம் மட்டுமே தரும். பொருள் தராது. அடுக்குத்தொடர் பிரித்தாலும் பொருள் தரும்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 10

5.4. முரண் தொடை

செய்யுளில் [b]முரண் தொடை என்பது தனிச் சிறப்புடையது. கவிதைச் சுவையை நன்கு தரவல்லது.

ஒரு சொல்லுக்கும் வேறொரு சொல்லுக்கும் எதிர் மறையாகப் பொருள் நல்குமாறு அமைத்துத் தொடுப்பது முரண்தொடை.

எ.டு:-

நம் மன்றத்தில் "முரண் காட்சிப்பாக்கள்" சிறந்த எடுத்துக்காட்டு.

இணை முரண் தொடை:-

எ.டு:-
சிறுகால் பேருரு கொண்டெதிர் நின்று

இதில் முதல் இரு சீர்களில் 'சிறு' - 'பெரிய உரு' என்று வந்ததால் இணை முரண் தொடை ஆயிற்று.

பொழிப்பு முரண் தொடை:-

எ.டு:-
ஓரடி யாலே இரு நிலம் அளந்து

இதில் முதல், மூன்றாம் சீரில் 'ஒரு - இரு' என்று வந்து பொழிப்பு முரண் தொடை ஆயிற்று.

ஒரூஉ முரண் தொடை:-எ.டு:-
பெருமை விளங்கப் பிறவெலாம் சிறிதாய்

பெருமை - சிறிது என்று முதல், நான்காம் சீரில் வந்ததால் ஒரூஉ முரண் தொடை ஆனது.

கூழை முரண் தொடை:-

எ.டு:-
பைந்தார் செங்கண் கார் மேனி வண்ணன்

பை- பசுமை
செங் - சிவப்பு
கார் - கறுமை
என்று மூன்று சீர்களிலும் முரண் தொடை வந்ததால் கூழைத்தொடை ஆயிற்று.

மேற்கதுவாய் முரண் தொடை:-

எ.டு:-
உவந்தனன் உலகோர் மலைத்தனர் அஞ்சி

- உவந்து, மலைப்பு, அச்சம் என்று 1, 3, 4 சீர்களில் வந்ததால் மேற்கதுவாய் முரண் தொடை ஆயிற்று.

கீழ்க்கதுவாய் முரண் தொடை:-

எ.டு:-
வலம்பெறும் இடத்தனாய் மன்னன் கீழுற

- இதில் வலது, இடது, கீழ் என்று மூன்றாம் சீர் தவிர ஏனையச்சீர்கள் முரணாக வந்ததால் கீழ்க்கதுவாய் ஆயிற்று.

முற்று முரண் தொடை:-

எ.டு:-
வடபால் தென்பால் மேற்பால் கீழ்பால்

- இதில் 4 சீர்களிலும் முரண் முறையே வட, தென், மேல், கீழ் என்று வந்ததால் முற்று முரண் தொடை அமைந்ததாயிற்று.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 9

5.2. எதுகைத் தொடை

ஒரு பாடலின் முதலடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம்
எழுத்தும் ஒரே எழுத்தாக அமைவது எதுகை எனப்படும். அது அடி எதுகை எனப்படும்.

எ.டு:-

ஊழிற் பெருவலி யாவுள் மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

- திருக்குறள்

முதலடியில் 'ஊ' என்னும் நெடிலையும் இரண்டாம் அடியில் 'சூ' என்னும் நெடிலையும்
அடுத்து 'ழி' என்னும் எழுத்து ஒன்றி வந்துள்ளதால் இது அடி எதுகைத் தொடை ஆகும்.

குறிப்பு:-
முதலெழுத்து அதாவது மோனையானது ஒரே அளவுடைய மாத்திரையாக இருந்து
இரண்டாவது எழுத்தானது ஒன்றி வந்தால் மட்டுமே அது எதுகைத்தொடையாக அமையும்.

எ.டு:-

யாண்டு பலவாக நரையில் ஆகுதல்
யாங்கா கியர்என வினைவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதந்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான் றோர் பலர்யான் வாழும் ஊரே.

- புற நானூறு.


கேள்வி:-
இப்பாடலில் எதுகைத்தொடை வரும் இடங்களையும்
வராத இடங்களையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


மோனைத்தொடையைப் போலவே எதுகைத் தொடையிலும் வரும் இடத்தைப் பொறுத்து

1. இணை எதுகை
2. பொழிப்பு எதுகை
3. ஒரூஉ எதுகை
4. கூழை எதுகை
5. மேற்கதுவாய் எதுகை
6. கீழ்க்கதுவாய் எதுகை
7. முற்று எதுகை

என வரும்.

1. இணை எதுகை :-

முதல் இரு சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது இணை எதுகை

எ.டு:-
முன்னும் பின்னும் வளம்பெற மொழிதல்

2. பொழிப்பு எதுகை:-

முதல் சீர் மற்றும் மூன்றாம் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
பொழிப்பு எதுகை.

எ.டு:-
என்னரும் பண்பாய் நன்றெனக் கண்டேன்.

3. ஒரூஉ எதுகை:-

முதல் சீர் மற்றும் நான்காம் சீரில் இரண்டாம் எழுத்து
ஒன்றி வருவது ஒரூஉ எதுகை.

எ.டு:-
மன்னிய செல்வம் மலர்தல் என்றும்

4. கூழை எதுகை:-

முதல், இரண்டாம், மூன்றாம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி
வருவது கூழை எதுகை.

எ.டு:-

துன்னிய நன்மை என்றும் நிலைபெறும்

5. மேற்கதுவாய் எதுகை:-

நான்குசீர் உள்ள அடியில் இரண்டாம் சீர் தவிர ஏனைய சீர்கள் எதுகைத்தொடை
பெற்றுவரின் அது மேற்கதுவாய் எதுகைத்தொடை எனப்படும்

எ.டு:-

தன்மை காணும் மிசை

6. கீழ்க்கதுவாய் எதுகை:-

நான்குசீர் உள்ள அடியில் மூன்றாம் சீர் தவிர ஏனைய சீர்கள் எதுகைத்தொடை பெற்றுவரின் அது கீழ்க்கதுவாய் எதுகைத்தொடை எனப்படும்.

எ.டு:-
மின்னும் நன்னெறி எனமேவிச் னியில்

7. முற்று எதுகை:-

முதல் அடியின் அனைத்து சீர்களிலும் எதுகை வருவது முற்று எதுகையாகும்.

எ.டு:-

நன்னுக என்றும் நன்மையும் முன்னுமே


5.3. இயைபுத் தொடை:-

ஒரு சொல் அல்லது அசை மீண்டும் மீண்டும் வருவது இயைபுத் தொடையாகும்.

எ.டு-1:-

உண்டி கொல்லோ! உடுப்பன கொல்லோ!
பெண்டிர் கொல்லோ! பேணுநர் கொல்லோ!

இங்கே 'கொல்லோ' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்ததால் இது இயைபுத்தொடையாயிற்று.

எ.டு-2:-

ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே
கூறும் அடி யார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரைவதைத் தமுகம் ஒன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மானே.


இதில் 'ஒன்றே' என்னும் சொல் முதல் ஆறு அடிகளில் வந்ததால் இயைபுத் தொடையாயிற்று.

குறிப்பு:-இயைபுத் தொடை இறுதிச் சீரிலிருந்து தொடங்குவதால் இதன்கண் தோன்றும் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகிய இயைபுகளையும் அவ்வாறே கொள்ளவேண்டும்.


1. இணை இயைபு (1,2 <---- )

கடைசிச் சீர்களில் முதலிரண்டு சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது இணை இயைபு
ஆகும்.

எ.டு:-

என்னை யாளும் எழில்நீ இறைநீ


2. பொழிப்பு இயைபு (1,3 <----)

கடைசியிலிருந்து முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது இணை இயைபு ஆகும்.

எ.டு:-

மன்னும் பொருள்நீ மதிக்கும் மறைநீ


3. ஒரூஉ இயைபு (1,4 <----)
கடைசியிலிருந்து முதல் மற்றும் நான்காம் சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது ஒரூஉ இயைபு ஆகும்.

எ.டு:-

முன்நீ முடிவில் நிகழும் பின்நீ


4. கூழை இயைபு (1,2,3 <----)

கடைசியிலிருந்து முதல்,இரண்டு மற்றும் மூன்றாம் சீர் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது கூழை இயைபு ஆகும்.

எ.டு:-

தரணியின் தாய்நீ தந்தைநீ தயைநீ

5. மேற்கதுவாய் இயைபு (1,3,4 <----)

கடைசியிலிருந்து இரண்டாம் சீர் தவிர ஏனைய சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது
மேற்கதுவாய் இயைபு ஆகும்.
எ.டு:-

அருள்நீ அன்பின் யாவும்நீ


6. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4 <----)


கடைசியிலிருந்து மூன்றாம் சீர் தவிர ஏனைய சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது கீழ்க்கதுவாய் இயைபு ஆகும்.

எ.டு:-

அழகன்நீ ஆதரிக்கும் தெய்வம்நீ திருவம்நீ


7. முற்று இயைபு (1,2,3,4 <----)

அனைத்து சீர்களும் இயைபுத்தொடை அமையப்பெறுவது முற்று இயைபு ஆகும்.
எ.டு:-

குழகன்நீ குலம்நீ குணம்நீ சீலமும்நீ

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 8

5. தொடை

ஓரெழுத்து ஒருமொழி

சில பாடல்களில் அலகிற்காக அசைகள் ஓரெழுத்தில் வரும்.
ஆனால் அவற்றிற்கு பொருள் இருக்காது. அத்தகைய அசைகளை
ஒரு மொழியாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

எ.டு-1 :-

தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
கல்லோர்க் களிக்கும் நதிச்சடையோய் எற்கருளில்
எல்லோர்க்கும் ஐயுறவா மே
- திருவருட்பா, சிவநேசவெண்பா

இப்பாடலின் கண் நான்காம் அடியில் ஈற்றசையாக வரும் "மே" என்னும் சீரில்
ஓரெழுத்தே வந்தபோதும் இது ஒரு மொழியாகாது.

எ.டு-2 :-

ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயும்அரைக்
காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மா(சு)உந்த
வீண்டும் சிரங்குனிக்கும் வித்தகனே நின் தலத்தைக்
கண்டும் சிரம்குவியாக் கை.
- திருவருட்பா, சிவநேசவெண்பா

இப்பாடலில் நான்காம் அடியில் வரும் மூன்றாம் சீர் "கை" என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக வந்த அசை. ஏனெனில் இங்கே "கை" என்ற சீருக்கு பொருள் உண்டு; இது உடலில் உள்ள ஒரு உறுப்பைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.

கேள்வி:-
எங்கே, இவற்றில் ஓரெழுத்து ஒருமொழி எவை என்றும் ஒருமொழி அல்லாதவை எவை என்றும்
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்: [b]கா, ஆ, ஈ, ஏ, பூ

தொடை என்பது பாடலின் ஓரடியில் வரும் சீர்களின் அமைப்புக்களோடு நில்லாது, தொடர்ந்து வருகின்ற இரண்டாவது மற்றும் அடுத்து வரும் அடிகளிலும் உள்ள அமைப்புக்களை எடுத்து இயம்புவதாகும்.

இத்தகைய தொடைகளை எட்டு வகைகளாக யாப்பிலக்கணம் அமைத்துள்ளது. அவை,

5.1. மோனைத் தொடை
5.2. எதுகைத் தொடை
5.3. இயைபுத் தொடை
5.4. முரண் தொடை
5.5. அளபெடைத் தொடை
5.6. இரட்டைத் தொடை
5.7. அந்தாதித் தொடை
5.8. செந்தொடை

என்பன.

5.1. மோனைத் தொடை:-

கவிதைகளில் ஒவ்வொரு சீரிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும். இதில் ஓரெழுத்தேயன்றி அதற்கு இன எழுத்துக்கள் வருதலும் மோனைத் தொடையில் அமையும்.

உயிர் எழுத்துக்களில்,

அ, ஆ, ஐ, ஔ - ஓரினம்

இ, ஈ, எ, ஏ - ஓரினம்

உ, ஊ, ஒ, ஓ - ஓரினம்

மெய் எழுத்துக்களில்,

ச், த் - ஓரினம்

ந், ஞ் - ஓரினம்

ம், வ் - ஓரினம்

ஒலி நயத்தை வைத்தே இவ்வாறு இனம் பிரிக்கப்பட்டுள்ளது என்பது உச்சரிக்கும் போதே புரிகிறதல்லவா?

குறிப்பு:-

உயிர் மெய் எழுத்துக்களில் உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஒரே இனமாக வந்தால் மட்டுமே மோனைத் தொடையாகு கணக்கிடப்படும்.
எ.டு:

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

- அப்பர் தேவாரம்

மேற்கண்ட பாடலில் முதலடியில்,
முதற்சீரின்('நமச்சி') முதலெழுத்து 'ந' , மூன்றாம் சீரின் ('ஞானமும்') முதலெழுத்து 'ஞா' ஒரே இனமாக வந்து மோனைத்தொடை ஆயிற்று.

ஆனால் இரண்டாவது அடியில்,

2-ம் சீரின் ('வாயவே') முதலெழுத்து 'வா', நான்காம் சீரின் ('விச்சையும்') முதலெழுத்து 'வி' இவற்றின் அடிப்படை மெய் எழுத்து 'வ்' ஆக இருந்த போதும் முறையே ஆ, இ இவற்றுடன் இணைந்ததால் இவை மோனைத்தொடையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் ஆ, இ
தத்தமக்குள் இன எழுத்துக்கள் அல்ல.

அதேபோல் நான்காம் அடியில்

2-ம் சீரின் ('வாயவே') முதலெழுத்து 'வா', நான்காம் சீரின் ('காட்டுமே') முதலெழுத்து 'கா' இவற்றின் அடிப்படை உயிர் எழுத்து 'ஆ' ஆக இருந்த போதும் முறையே வ், க் இவற்றுடன் இணைந்ததால் இவை மோனைத்தொடையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் வ், க்
தத்தமக்குள் இன எழுத்துக்கள் அல்ல.

மோனைத் தொடையின் வகைகள்:-

அ) இணை மோனை
ஆ) பொழிப்பு மோனை
இ) ஒரூஉ மோனை
ஈ) கூழை மோனை
உ) மேற்கதுவாய் மோனை
ஊ) கீழ்க்கதுவாய் மோனை
எ) முற்று மோனை
ஏ) அடி மோனை

மோனையின் வகையானது இடம்பெறும் சீரின் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.

அ) இணை மோனை:- [1 மற்றும் 2]

ஒரு அடியில் முதல் சீரிலும், அதற்கடுத்த இரண்டாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது இணை மோனை எனப்படும்.

எ.டு:-

அன்னையின் அன்பில் எல்லோரும் திளைக்க

ஆ) பொழிப்பு மோனை:- [1 மற்றும் 3]

ஒரு அடியில் முதல் சீரிலும், மூன்றாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது பொழிப்பு மோனை எனப்படும்.

எ.டு:-

அகமெனும் இனிய அகத்தினில் மேவும்

இ) ஒரூஉ மோனை:- [1 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.

எ.டு:-

அசைவிலா நன்னெறி விளங்கும் அறிவால்

ஈ) கூழை மோனை:- [1,2 மற்றும் 3]

ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு பாடலைத் தொடுப்பது கூழை மோனை எனப்படும்.

எ.டு:-

அவனியும் அருட்கண் அமைந்து மலர

உ) மேற்கதுவாய் மோனை:- [1,3 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், மூன்றாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.

எ.டு:-

அரும்பும் இனிமையும் அதன்வழி அணிகொளும்

ஊ) கீழ்க்கதுவாய் மோனை:- [1,2 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு பாடலைத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.

எ.டு:-

அருந்தமிழ் அழகும் பொழிந்தது அதன்தலை

எ) முற்று மோனை:- [1,2,3 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு பாடலைத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்.

எ.டு:-

அறநெறி அங்கே அரசென ஆகி

ஏ) அடி மோனை:-

ஒரு பாடலின் எல்லா அடியிலும் முதலெழுத்து ஒன்றி வருவது போல் தொடுப்பது அடி மோனைத்தொடை எனப்படும்.

எ.டு:-

மேற்கூறிய 'நமச்சிவாய'ப் பாடலில் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வந்ததால் அப்பாடலை அடி மோனையாகக் கொள்ளலாம்.

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
- அப்பர் தேவாரம்

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 7

5. அடி

“அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” - பழ மொழி
“அடிமேல் அடி வைத்தால் பாடல் வரும்” - பா மொழி

கவிதையில் அடி என்பது சீர்களின் அமைப்பையொட்டி வருவது. அடி வகைகளின்
எண்ணிக்கையைப் பற்றிச் சிக்கல் எதுவும் இல்லை. கவிஞர்கள் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு
அமைத்துக் கொள்ளலாம். சீர்களைக் கொண்டு அமைக்கப்படுவது அடி.

யாப்பிலக்கணப்படி “அடி” யை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
கழிநெடிலடி


1. குறளடி:-

இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி.இது ஈரசைச்சீர்களாகவும் இருக்கலாம்.மூவசைச் சீர்களாகவும் இருக்கலாம்.
நான்கசைச் சீர்கள் பாடல்கள் வழக்கத்தில் இல்லை.இதனை இரண்டு ஈரசைச்சீர்களாகக் கொள்கிறோம். எனவே
நான்கசைச்சீர்கள் பற்றிக் கவலைக்கொள்ளவேண்டாம்.

குறளடிக்கு உதாரணம் பார்க்கலாம்.

எ.டு-1:-

காதற் கொழுநனைத்
தீதில் தொழுது
வானுலகு அடைந்தனள்
மானுட மங்கையே.

எ.டு-2:-

கைசிறந்தன கடிவளை
மெய்சிறந்தன மலர்க்கொடி

ஓரடியில் இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி என்பது இப்போது ளங்கியிருக்கும்.இரண்டு அடிகளில் வந்த போதும் திருக்குறளை ‘குறளடி’ என்று கூறுவதில்லை. ஏனெனில் திருக்குறளின் முதலடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் வருவதால் அதைக் குறளடி என்று கூற இயலாது. ஆனால் வெண்பாவிற்குரிய இலக்கணத்துடன் இரண்டு அடிகளில் வருவதால் ‘குறள் வெண்பா’ என்றுதான் கூறவேண்டும். வெண்பா பற்றி இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.

குறளடி பற்றி ஐயமின்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை விளக்கினேன். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

2.சிந்தடி:-

இது ஓரடியில் மூன்று சீர்கள் கொண்டு வருவது.

எ.டு:-

தேனினும் இனிய வாழ்வை
வானிலும் பெறுதல் வேண்டி
நானிலம் தன்னில் வேள்வித்
தூநெறி தழைக்கச் செய்தான்


மேற்கண்ட பாடலில் ஒவ்வொரு அடியும் 3 சீர்கள் கொண்டு வந்ததால் சிந்தடி என்று அழைக்கப்படுகிறது.

கவிதையில் வெண்பாவின் ஈற்றடியும், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி எனப்படும் கடைசி அடிக்கு முன்னால் உள்ள அடியும் மற்றும் வஞ்சி விருத்தங்களும் மூன்று சீர்கள் கொண்டு சிந்தடியாக வரும்.

3. அளவடி:-

இது ஓரடியில் நான்கு சீர்கள் கொண்டு வரும்.இத்தகைய பாடல்கள் தாம் பெருவாரியாக
அமைந்துள்ளன.

எ.டு:-

ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

இச்சங்கப் பாடல் நான்கு சீர்கள் கொண்டு அளவடியாக வருகிறது.இதில்,

முதற்சீர் - ஈன்றுபுறந்
2வது சீர் - தருதல்
3வது சீர் - என்தலைக்
4வது சீர் - கடனே

ஆகும்.

எனவே முதலடியில் 4 சீர்கள் வந்து அளவடி ஆயிற்று. அவ்வாறே 2-வது, 3-வது, 4-வது, 6-வது அடிகளிலும் நான்கு சீர்கள் கொண்டு அளவடி வந்துள்ளது. ஆனால் ஈற்றயலடி, அதாவது கடைசி அடிக்கு முந்தைய அடி (5-வது அடி) மூன்று சீர்கள் பெற்று சிந்தடியாக வந்துள்ளது. ஆசிரியப்பாவில் இவ்வாறு வரும்.இதே போல் குறளடியும் கலந்து வரும். அவை பற்றி ஆசிரியப்பாவில் விளக்கமாகப் பார்ப்போம்.

4. நெடிலடி:-

ஐந்து சீர்கள் கொண்டு வருவது நெடிலடி ஆகும்.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
********* வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
********* தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக்
********* கார்மயில் வாகனனைச்
சார்துணைப் போதும் மறவா
********* தவர்க்கொரு தாழ்வில்லையே.

- கந்தரலங்காரம் : 72
இதில்,

முதற் சீர் - சேந்தனைக்
2-ம் சீர் - கந்தனைச்
3-வது சீர் - செங்கோட்டு
4-வது சீர் - வெற்பனைச்
5-வது சீர் - செஞ்சுடல்வேல்

என இப்பாடல் ஐந்து சீர்கள் கொண்ட நெடிலடியாகும்.இந்த 5 சீர்களும் ஒரே அடியில் வந்ததாகவே கொள்ளவேண்டும். அதாவது முதல் வரியில் மூன்று சீர்களும் இரண்டாவது வரியில் இரண்டு சீர்களும் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இதை இரண்டு அடிகளாகக் கொள்ளக்கூடாது. எனவே தான் மடக்கி (அதாவது 2வது வரி சற்று உள்தள்ளி (இங்கே மடித்து எழுத முடியாததால் நட்சத்திரக் குறியிட்டுக் காட்டியுள்ளேன்)) எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறே 2,3,4 அடிகளும் வந்துள்ளன.

5. கழிநெடிலடி:-

ஓரடியில் ஆறு, ஏழு, எட்டு என்று ஐந்திற்கு மேல் சீர்கள் கொண்டு வருவது கழி நெடிலடி எனப்படும்.இதற்கு மிகவும் நீண்ட அடி என்பது பொருள்.

எ.டு:-

ஆழிசூழ் உலகம் எல்லாம்
******** பரதனே ஆள நீபோய்த்
தாழிரும் சடைகள் தாங்கித்
******** தாங்கரும் தவம்மேற் கொண்டு
பூழிரும் கானம் நண்ணிப்
********* புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வாஎன்று
********* இயம்பினன் அரசன் என்றாள்.
முதல்சீர் - ஆழிசூழ்
2வது சீர் - உலகம்
3வது சீர் - எல்லாம்
4வது சீர் - பரதனே
5வது சீர் - ஆள
6வது சீர் - நீபோய்த்

என ஆறுசீர்கள் முதலடியில் வந்து கழி நெடிலடி ஆயிற்று.இதுபோன்றே 2,3,4வது அடிகளிலும் கழி நெடிலடிகள் வந்தமையைக் காண்க.

இவ்வாறு 6 சீர்கள் முதல் பதினாறு சீர்கள் கொண்டு ஒரு பாடலின் அடி அமைவது கழி நெடிலடி என்று அழைக்கப்படும்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 6

4. தளை

எழுத்துக்கள் சேர்வதால் அசை உண்டாகிறது. அசைகள் சேர்வதால் சீர்கள் அமைகின்றன.
இவற்றுள் சீர்களுக்குள்ளே இடையில் ஏற்படும் ஒலி உச்சரிப்பே தளை என இலக்கணத்தில் பேசப்படுகிறது. அதாவது, சொற்களின் இடையில் காணப்பெறும் ஒலிக்கூற்று இது. இத்தகைய ஒலி ஒழுங்கினை யாப்பிசை எனவும் கூறலாம். சந்த இனிமை என்று கூறுவதும் உண்டு.

கவிதையின் அமைப்பிற்குச் சந்தம் விளங்கும் தன்மையே மெருகை உண்டாக்குகின்றது. கவிதைகளுக்குள் சீர்கள் அடிப்படை. சீர்களைக்கொண்டு அமையப்பெறும் கவிதைகளை வடிவம்பெறச் செய்வது தளை என்பதே. ஒவ்வொரு பா வகையும் அவை பெறுகின்ற தளைகளின் அமைப்பைச் சார்ந்தே தனித்துவம் பெறுகின்றன.

பாவினத்திற்கு உரிய தளைகள் கொண்டு சீர்கள் அமைதல் வேண்டும் என்பதாம். ஒரு பாவினத்திற்கு உரியதல்லாத தளை ஆங்கு அமையப்பெற்றால் அறிஞர் பெருமக்கள் அவற்றைத் தளை தட்டுகிறது என்று கூறி ஏற்றுக் கொள்வதில்லை.

ஒவ்வொரு பா இனத்திற்கும் தனித்தனியே தளைகள் உண்டு. இத்தன்மையில்,

1. ஆசிரியப்பா அமைதல் வேண்டும்.
2. வெண்பா அமைதல் வேண்டும்.
3. கலிப்பா அமைய வேண்டும்.
4. வஞ்சிப்பா அமைய வேண்டும்.

எனவே, ஒரு சீரினை அடுத்துவரும் பிறிதொரு சீரினைக்கொண்டு தளையைக் கணக்கிட வேண்டும்.

இன்ன தளையுடையது இன்ன பா என்று இலக்கண நூலார் வகுத்தவாறு கொள்ளவேண்டும். இப்போது அத்தகைய தளைகளைப் பற்றிச் சிறிது காண்போம். அதற்கு முன்னர் ஒரு முக்கிய உண்மையை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்பு:-

பொதுவாக "முன்" என்னும் சொல்லை ஒரு சொல்லுக்கு முன்னால் வந்த சொல்லென்றே கருதுவார்கள். புற நானூற்றில் ஒரு பாடல்,
"ஒருநாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பலநாள் பயின்று பலருடன் செல்லினும்"
இதில்,

இருநாள் செல்லலம் என்ற தொடருக்கு முன்னதாக ஒருநாள் செல்லலம் என்ற தொடர் உள்ளது என்று கூறுதல் வழக்குமுறை. ஆனால் இலக்கணத்தில் நிலைமொழி என முதற்சொல்லையும் வருமொழி என அடுத்து வரும் சொல்லையும், சான்றோர்கள் குறித்துள்ளார்கள். எனவே இக்கருத்தின்படி ஒரு நாள் செல்லலம் என்பதன் முன்னால் இரு நாள் செல்லலம்
என்பது வந்ததாகக் கொள்ளுதல் வேண்டும்.

நாம் எழுத்துக்களை முன்னோக்கி எழுதுகின்றோம். எனவே 'வணக்கம்' என்னும் சொல்லை எழுதும்போது 'வ' என்ற எழுத்தும், அதற்கு முன்னே 'ண' என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே 'க்' என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே 'க' என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே 'ம்' என்னும் எழுத்து வருமாறும் எழுதுகிறோம். இவையாவும் பின்னோக்கி எழுதப்படுவதில்லை.

எனவே யாப்பிலக்கணத்தில் முன் என்று கூறப்படுதல் என்பது, ஓரெழுத்தை அடுத்து வரும் எழுத்து என்று கொள்ள வேண்டும்.

தளைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

4.1. ஒன்றிய தளைகள்
4.2. ஒன்றாத தளைகள்

அதாவது நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் ஒன்றி வந்தால் அவை ஒன்றிய தளைகள் என்றும் வெவ்வேறாக மாறி வந்தால் ஒன்றாத தளைகள் என்றும் வகைப்படும்.

4.1. ஒன்றிய தளைகள்
4.1.1. நேரொன்று ஆசிரியத் தளை
4.1.2. நிரையொன்று ஆசிரியத் தளை
4.1.3. வெண்சீர் வெண் தளை
4.1.4. ஒன்றிய வஞ்சித்தளை

ஆகியவையும்

4.2. ஒன்றாத தளைகள்
4.2.1. இயற்சீர் வெண் தளை
4.2.2. கலித்தளை
4.2.3. ஒன்றாத வஞ்சித்தளை

ஆகியவையும் மொத்தம் ஏழு வகையான தளைகள் உள்ளன.
இவைகளைப்பற்றி விரிவாகக் காண்போம்.

4.1.1. நேரொன்று ஆசிரியத் தளை:-

ஈரசைச் சீர்களில் நேர் முன் நேர் வருவது, அதாவது நிலைமொழியின் கடைசி அசை நேராகவும்
வரும்மொழியின் முதல் அசை நேராகவும் இருப்பது நேரொன்று ஆசிரியத் தளை எனப்படும்.

எ.டு:-
பல்சான் றீரே பல்சான் றீரே
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமா தேமா தேமா தேமா

நேர் முன் நேர் வந்ததால் ஒன்றிய ஆசிரியத் தளை ஆயிற்று.


4.1.2. நிரையொன்று ஆசிரியத் தளை:-

இதுவும் ஈரசைச்சீரில் நிரை முன் நிரை வருவதால் நிரையொன்று ஆசிரியத்தளை எனப்பட்டது.
எ.டு:-
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நிரை நேர்
புளி மா கூவிளம் கருவிளம் புளி மா

நிரை முன் நிரை வந்ததால் ஒன்றிய சிரியத் தளை யிற்று.

4.1.3. வெண்சீர் வெண்டளை:-

காய்ச்சீர் முன்னால் நேரசை வருவது வெண்சீர் வெண்டளையாகும்.

எ.டு:-
மல்லிகையே வெண்சங்கா வண்தே
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா

4.1.4. ஒன்றிய வஞ்சித்தளை:-

நேரசையில் வரும் காய்ச்சீரை வெண் சீர்நிரையசையில் வரும் கனிச்சீரை
வஞ்சிச் சீர் அல்லது வஞ்சி உரிச்சீர் என்று உரைக்கப்படும்.

'காய்ச்சீர்' என்றாலும் 'கனிச்சீர்' என்றாலும் அவை மூவசைச் சீர்களே. இவற்றுள் கனிச்சீர் முன்னே நிரையசை வருவது ஒன்றிய வஞ்சித்தளையாகும்.

எ.டு:-
கூறாமொழி கொடுங்கூற்றென
வாராதொழி மடநெஞ்சமே - இதில்

கூ றா மொழி கொடுங் கூற் றென
நேர்| நேர்| நிரை நிரை| நேர்| நேர்
தேமாங்கனி புளிமாங்கனி


வா ரா தொழி மட நெஞ் சமே
நேர்| நேர்| நிரை நிரை| நேர்| நேர்
தேமாங்கனி புளிமாங்கனி


இனி ஒன்றாத தளைகளைப்பற்றி பார்ப்போம்.

4.2.1. இயற்சீர் வெண்டளை:-

இது ஈரசைச் சீர்கள் ஒன்றையொன்று அடுத்து வரும்போது ஒன்றாத அசைகளால் வரும் ஒலி நயமே 'இயற்சீர் வெண்டளை' எனப்படுகிறது.

எ.டு:-
ஈயென இரத்தல் இழிந்தன்(று) அதன்எதிர்
கூவிளம் புளிமா புளிமா கருவிளம்
நேர்| நிரை நிரை| நேர் நிரை| நேர் நிரை| நிரை

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
தேமா தேமா கருவிளம் புளிமாங்காய்
நேர்| நேர் நேர்| நேர் நிரை| நிரை நிரை| நேர்| நேர்

நேரசையின் முன்னால் நிரையசை வந்ததால் இது 'இயற்சீர் வெண்தளை' கும்.
இதே போல் நிரையசை முன்னால் நேரசையும் வரும்.
எ.டு:-

வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
கூவிளம் கருவிளம் தேமா தேமா
நேர்| நிரை நிரை| நிரை நேர்| நேர் நேர்| நேர்

தினையனைத்(து) யினும் இனி(து)அவர்
கருவிளம் கூவிளம் கருவிளம்
நிரை| நிரை நேர்| நிரை நிரை| நிரை

துணையள(வு) அறிந்து நல்கினர் விடினே
கருவிளம் புளிமா கூவிளம் புளிமா
நிரை| நிரை நிரை| நேர் நேர்| நிரை நிரை| நேர்

மேற்குறித்த பாடலில் கோடிட்ட இடத்தில் நிரை முன் நேர் வந்து 'இயற்சீர் வெண்தளை' னதைக்காணலாம்.

4.2.2. கலித்தளை:-

காய்ச்சீர் வெண்பா உரிச்சீர் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே! காய்ச்சீரின் முன்னால் நிரையசை
வருமானால் அது கலித்தளை வருதலாம்.

எ.டு:-

அரனதிகன் உலகளந்த அரியதிகன்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர்

என்றுரைக்கும் அறிவிலார்க்குப்
கூவிளங்காய் கருவிளங்காய்
நேர்| நிரை| நேர் நிரை| நிரை| நேர்

பரகதிசென்(று) அடைவரிய பரிசேபோல்
கருவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர் நிரை| நேர்| நேர்

புகலரிய பிண்பிற்றாமல்
கருவிளங்காய் தேமாந்தண்பூ
நிரை| நிரை| நேர் நேர்| நேர்| நேர்| நேர்


குறிப்பு :-

காய்ச்சீர் முன்னால் நேரசை எனவும்
கனிச்சீர் முன்னால் நிரையசை எனவும்
அழைக்கப்படும். இவை, மூவசைச்சீர் கொண்டு வரும்.

4.2.3. ஒன்றாத வஞ்சித் தளை:-

கனிச்சீர் வஞ்சிப்பா உரிச்சீர் என்பதும் நாம் முன்பே கண்டதே!
கனிச்சீர் முன் நேரசை வருவது ஒன்றாத வஞ்சித்தளையாகும்.

எ.டு:-
பாடுங்கிளி வாராமுனம் நாடுங்கனி சேர்காதலர்
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை

இதுவரை 7 தளைகளைப்பற்றிப் படித்தோம்.

ஒரு மீள்பார்வைப் பார்ப்போமா?

ஒன்றிய தளைகள்
1. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை - ஈரசைச்சீர்
=> மா முன் நேர் அசை வரும்.
2. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை - ஈரசைச்சீர்
=> விளம் முன் நிரை அசை வரும்.
3. வெண்சீர் வெண்டளை - மூவசைச்சீர்
=> காய் முன் நேரசை வரும்.
4. ஒன்றிய வஞ்சித் தளை - மூவசைச்சீர்
=> கனி முன் நிரை அசை வரும்.

ஒன்றாத தளைகள்

1. இயற்சீர் வெண்டளை - ஈரசைச்சீர்
=> மா முன் நிரை அசையும்
=> விளம் முன் நேர் அசையும் வரும்.
2. கலித்தளை - மூவசைச்சீர்
=> காய்முன் நிரையசை வரும்.
3. ஒன்றாத வஞ்சித்தளை - மூவசைச்சீர்
=> கனிமுன் நேர் அசை வரும்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 5

3. சீர்

சீர் மேவும் வாழ்க்கை செம்மையுடன் விளங்கும், அதே போன்று சீர்கள் கொண்டு விளங்கும் கவிதையும் செம்மையுடன் விளங்கும். எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து அசை உருவாவதைப்போல் அசைகள் ஒன்று சேர்ந்து சீர் உருவாகும்.

உரை நடையில் பதம் அல்லது சொல், வார்த்தை என்பதைத்தான் கவிதையில் சீர் என்று கூறுகிறோம். இனி அவ்வாறே பின்வருவனவற்றில் அழைப்போம்.

சீர்கள் நான்கு வகைப்படும். அவை,

3.1. ஓரசைச்சீர் - ஓர் அசை உடையது

3.2. ஈரசைச்சீர் - இரண்டு அசைகள் உடையது

3.3. மூவசைச்சீர் - மூன்று அசைகள் உடையது

3.4. நான்கசைச்சீர் - நான்கு அசைகள் உடையது

எனப்படும்.

அசைகளால் வடிவமைக்கப்படும் இத்தகைய சீர்கள் நேரசையாகவோ, நிரையசையாகவோ
அல்லது இரண்டும் விரவியோ வரும்.

அசைகளைப்பற்றி நாம் தெளிவாக இருப்பதால் சீர்கள் பற்றி இனி படிப்பது மிகவும் எளிது.

3.1. ஓரசைச்சீர்

ஓரசைச்சீரில் நேரசை, நிரையசை மட்டும் வரும்.

3.1.1. நேரசை

எ.டு:-

பு - நேரசை
தா - நேரசை
கண் - நேரசை
கால் - நேரசை
3.1.2. நிரையசை

எ.டு:-

கவி - நிரையசை
கவின் - நிரையசை
கலா - நிரையசை
கலாம் - நிரையசை

(சென்ற பாகத்தில் இதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். புதியவர்கள் மேலே காண்க!)

3.2. ஈரசைச்சீர்

ஈரசைச்சீர் என்பது இரண்டு அசைகளைக்கொண்டு வரும். அவை
நான்கு வகைப்படும். அவை

3.2.1) நேர் நேர் - தேமா
3.2.2) நிரை நேர் - புளிமா
3.2.3) நேர் நிரை - கூவிளம்
3.2.4) நிரை நிரை - கருவிளம்

இதை நினைவில் வைத்துக்கொள்ள மற்றொரு சுலபமான வழிமுறையைச் சொல்லித்தரவா?
ஈரசைச்சீரில் நேரசையில் முடிந்தால் அது மாச்சீர், நிரையசையில் முடிந்தால் அது விளச்சீர்.
தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் - இவற்றை அலகு பிரித்தாலே அவை எந்த அசைகள் எனத் தெரிந்துவிடும்.

தேமா - இதை அலகு பிரியுங்களேன் => தே | மா = நேர் நேர்.
புளிமா - இதற்கு => புளி | மா = நிரை நேர்
கூவிளம் - இதற்கு => கூ| விளம் = நேர் நிரை
கருவிளம் - இதற்கு => கரு | விளம் = நிரை நிரை

மாச்சீர்கள்:-

தேமா => தே | மா = நேர் நேர்
நேரசையுடன் நேரசை இணைந்தால் தே மா

புளிமா => புளி | மா - நிரை நேர்
நிரையசையுடன் நேரசை இணைந்தால் புளி மா

விளச்சீர்கள்:-

கூவிளம் => கூ| விளம் - நேர் நிரை
நேருடன் நிரை இணைந்தால் கூ விளம்

கருவிளம் => கரு | விளம் - நிரை நிரை
நிரையுடன் நிரை இணைந்தால் கரு விளம்.

இப்போது நன்றாக மனதில் பதிந்து விட்டது தானே! இனி அடுத்த சீர் பார்ப்போம்.

3.3. மூவசைச்சீர்

ஈரசைச்சீர் நன்றாக தெரிந்தால் மூவசைச்சீரும், நான்கசைச்சீரும்
கண்டுபிடிப்பது மிக எளிது. ஈரசைச்சீரில் மேலும் ஒரு 'நேர்' அசை இணைந்தால்
காய்ச்சீர் என்றும் 'நிரை' அசை இணைந்தால் கனிச்சீர் என்றும் அழைப்போம்.
அதைப்பார்க்கலாமா?

3.3.1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
3.3.2. நிரை நேர் நேர் - புளிமாங்காய்
3.3.3. நேர் நிரை நேர் - கூவிளங்காய்
3.3.4. நிரை நிரை நேர் - கருவிளங்காய்

3.3.5. நேர் நேர் நிரை - தேமாங்கனி
3.3.2. நிரை நேர் நிரை - புளிமாங்கனி
3.3.3. நேர் நிரை நிரை- கூவிளங்கனி
3.3.4. நிரை நிரை நிரை - கருவிளங்கனி

எவ்வளவு எளிமையாக உள்ளது! இதேபோல் நான்கசைச்சீர்களைக்காண்போம்

3.4. நான்கசைச்சீர்

மேற்கூறிய எட்டு வகையான மூவசைச்சீருடன் நேர் அசை இணைந்து 8ம்,
நிரை அசை இணைந்து 8ம் மொத்தம் 16 சீர்கள் நான்கசைச்சீர்களாகும்.

இதைச் சிறிது கவனமாகப் பார்க்கவேண்டும்.

மூவசைச்சீருடன்,
நேர் அசை இணைந்தால் 'பூ' சீராகவும்
நிரை அசை இணைந்தால் 'நிழல்' சீராகவும் அழைக்கப்படும்.
ஆனால்,
ஈற்று நேர்ச் சீருடன் இணைந்தால் 'தண்' என்றும்
ஈற்று நிரைச் சீருடன் இணைந்தால் 'நறு' என்றும் இணைந்து அழைக்கப்படும்.

அவை,

3.4.1. நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூ
3.4.2. நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூ
3.4.3. நேர் நிரை நேர் நேர் - கூவிளந்தண்பூ
3.4.4. நிரை நிரை நேர் நேர் - கருவிளந்தண்பூ

3.4.5. நேர் நேர் நிரை நேர் - தேமா நறும்பூ
3.4.6. நிரை நேர் நிரை நேர் - புளிமா நறும்பூ
3.4.7. நேர் நிரை நிரை நேர் - கூவிள நறும்பூ
3.4.8. நிரை நிரை நிரை நேர் - கருவிள நறும்பூ

3.4.9. நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண் நிழல்
3.4.10. நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண் நிழல்
3.4.11. நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண் நிழல்
3.4.12. நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண் நிழல்

3.4.13. நேர் நேர் நிரை நிரை - தேமா நறு நிழல்
3.4.14. நிரை நேர் நிரை நிரை - புளிமா நறு நிழல்
3.4.15. நேர் நிரை நிரை நிரை - கூவிள நறு நிழல்
3.4.16. நிரை நிரை நிரை நிரை - கருவிள நறு நிழல்

காய்ச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நேரசை தண்பூ எனவும்,
கனிச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நேரசை நறும்பூ எனவும் பெறும்.

அதே போல்

காய்ச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நிரையசை தண்ணிழல் எனவும்,
கனிச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நிரையசை நறு நிழல் எனவும் பெறும்.

கவிதைகளில் நான்கசைச்சீர்கள் வருவது தற்போது வழக்கத்தில் இல்லை. எனவே நான்கசைச்சீர்களைக்கண்டு மலைத்து விட வேண்டாம். ஆரம்பத்தில் ஈரசைச்சீர்களைக்கொண்டு எழுத முற்படலாம். பழக்கத்தில் இவை சரளமாக வந்துவிடும்.

மீண்டும் ஒரு மீள்பார்வைக் காண்போமா?

ஓரசைச்சீர் - நேர், நிரை
ஈரசைச்சீர் - மாச்சீர், விளச்சீர்
மூவசைச்சீர் - காய்ச்சீர், கனிச்சீர்
நான்கசைச்சீர் - பூச்சீர், நிழல் சீர் ( காய்ச்சீருடன் இணைந்தால் 'தண்', கனிச்சீருடன் இணைந்தால் 'நறும்' என இணைத்துக்கூறல் வேண்டும். )

அடுத்த பாடத்தில் சீர்களைக்கொண்டு அமைக்கப்பெறும் தளைகளைப்பற்றி பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு சிறு கேள்வி : வரும் மொழி, நிலை மொழி என்றால் என்ன?

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 4

யாப்பு - யாத்தல் (கட்டுதல்), தொழிற் பெயர். இங்கு யாக்கப்படும் (கட்டப்படும்)
செய்யுளுக்கு ஆகி வருதலால் தொழிலாகு பெயர்.

யாப்பு, செய்யுள், பாட்டு, பா, கவி - ஒரு பொருட் சொற்கள்.

எலும்பு, நரம்பு, இரத்தம், கொழுப்பு, தசை முதலியவற்றால் நமது உடம்பு கட்டப்பட்டிருத்தல் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய உறுப்புக்களால் கட்டப்பட்டதே செய்யுளாகும்.

செய்யுளின் முதல் உறுப்பான எழுத்தின் தொடர்ச்சியைப்பார்ப்போம்.

ஒற்று அளபெடை

ஒற்றெழுத்து மிகுந்து வருவது ஒற்றளபெடை ஆகும்.

எ.டு:-

அம்ம்பு, தின்ன்னு, எங்ங்கே.

முதல் எழுத்து, சார்பு எழுத்து:-

எழுத்துக்களில் 'அ'கரம் முதல் 'ஔ'காரம் வரையிலான 12 உயிர் எழுத்துக்களும்
'க்' முதல் 'ன்' வரையிலான மெய்யெழுத்துக்கள் 18-ம் முதல் எழுத்துக்களாகும்.

குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பு எழுத்துக்களாகும்.
அதாவது இந்த எழுத்துக்கள் சார்ந்தே வரும். தனித்து இயங்கா. இவற்றுள் குற்றியலுகரம் வெண்பா பாடல்களில் வரும்போது நன்கு ஆராய்ந்து சொல்லும் நிலையில் உள்ளதால் அதனைப்பற்றி பிறகு விரிவாகக் காண்போம்.

குறிப்பு: ஐகாரக்குறுக்கம் போன்றே, ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியனவும் உள்ளன.

2. அசை

எழுத்திலிருந்து அமைவது அசை. சில பாடல்களில் இடைவெளியை நிரப்புவதற்காக அசைச்சொற்கள் வரும். அது வேறு!

எ.டு: மாதோ, ஆல்.

"வண்டுகள் இனிது பாட
மருதம் வீற் றிருக்கும் மாதோ!"

இதில், மாதோ என்பது அசைச்சொல்.

அதே போல்

"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து"

இப்பாடலில் ஆல் என்ற சொல் அசைச்சொல்லாக வந்துள்ளது. அதாவது இத்தகைய சொல்லிற்கு பொருள் இருக்காது. இவை செய்யுளின் ஓசை நயத்தைக்காக்க வேண்டி வரும்.

ஆனால் நாம் பார்க்கப்போகும் 'அசை' என்பது செய்யுளிலில் கணக்கிடப்படும் அலகு (அளவீடு) ஆகும். அதாவது வார்த்தைகளை மாத்திரைகளுக்குத் தக்கப்பிரிப்பதை அசை என்போம்.
மரபுக்கவிதையில் அசை பிரிக்கத்தெரிந்தால் தான் அது எந்த வகைப்பா என்பதை அறியமுடியும்.
எனவே இந்த அசைப் பிரித்தலை கவனமாகவும், எளிமையாகவும் எப்படி என்று பார்ப்போம்.

அசை இரண்டு வகைப்படும்.

1. நேர் அசை, 2. நிரை அசை.

1. நேரசை:-
ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து தனித்தோ, அல்லது ஒற்றுடன்(புள்ளிவைத்த எழுத்துடன்) சேர்ந்தோ வருவது வருவது நேரசை.

எ.டு:-
'அ' அல்லது 'ஆ' தனித்துவருதல்.
அல், ஆல், கண், நாள் என்று ஒற்றுடன் சேர்ந்து வருதல்.

கண்கள் - இந்த வார்த்தையை (சீர்) அசைப் பிரிக்கவேண்டுமாயின்
கண் | கள் எனப்பிரிக்கலாம்.
நேர்- நேர் = இதில் இரண்டு நேர் அசைகள் வந்துள்ளன.

2. நிரையசை:-
இரண்டு குறில் எழுத்துக்கள் சேர்ந்து வருதல், இரண்டு குறில் எழுத்துக்களோடு ஒற்றெழுத்து சேர்ந்து வருதல், ஒரு குறிலையடுத்து ஒரு நெடிலும் அடுத்து ஒற்றும் சேர்ந்து வருதல் நிரையசையாகும்.

** இரு நெடிலோ, அல்லது நெடிலுடன் குறிலோ வர இயலாது.

நிரையசை எ.டு:-
படி - இரண்டு குறில்கள் சேர வருவது.
பணம் - இரண்டு குறிலை அடுத்து ஒரு ஒற்று வருவது.
சிவா - குறிலுடன் நெடில் சேர்ந்து வருவது.
சிறார் - குறிலுடன் நெடிலெழுத்து சேர்ந்து ஒற்றுடன் வருவது.


இவற்றையெல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?

ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு வீட்டில் கணவன்( நெடில்), மனைவி(குறில்), கணவனின் தங்கை(குறில்), குழந்தை(ஒற்று) இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு இரு சக்கர வாகனத்தில் செல்லவேண்டுமாயின் எப்படி பயணிக்க வாய்ப்பு உள்ளது?
குழந்தை (ஒற்று) தனித்து இயங்க முடியாது.

நேர் அசை=> 1. கணவன் (நெடில்) மட்டும் செல்லலாம்.
2. மனைவி (குறில்) மட்டும் செல்லலாம்.
3. கணவனுடன் (நெடில்) குழந்தை (ஒற்று) செல்லலாம்.
4. மனைவியுடன்(குறில்) குழந்தை(ஒற்று) செல்லலாம்.

நிரை அசை => 1. மனைவியும்(குறில்), கணவனின் தங்கையும்(குறில்) செல்லலாம்.
2. மனைவியும்(குறில்), கணவனும்(நெடில்) செல்லலாம்.
3. மனைவியும்(குறில்), கணவனும்(நெடில்), குழந்தையும் (ஒற்று) செல்லலாம்.
4. மனைவியும்(குறில்), கணவனின் தங்கையும்(குறில்), குழந்தையும்(ஒற்று) செல்லலாம்.

** கணவனுடன், மனைவியோ(குறில்) அல்லது கணவனின் தங்கையோ(குறில்) செல்ல முடியாது.

அதாவது குறிலுக்குத்தான் முதல் உரிமை.
(அட, டிராபிக் ரூல் நால்லாருக்கே!)

இதையே யாப்பருங்கலக்காரிகை,

"நெடில் குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகையானே!"

என்று நேரசைக்கும்

"குறிலிணை குறில் நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்
நெறிமையின் நான்காய் வகும் நிரை யசையே"

என்று நிரையசைக்கும் இலக்கணமாக எடுத்தியம்புகிறது.

மற்றொரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். "

- திருக்குறள் : 282

இதில் முதல் அடி(வரி)யில் 4 சீர்களும்(வார்த்தை), இரண்டாம் அடியில் 3 சீர்களும் வந்துள்ளன.
இதை எப்படி அசைப்பிரிக்கலாம்? பார்ப்போமா?

உள்| ளத்| தால் உள்| ளலும் தீ| தே பிறன்| பொரு| ளைக்
நேர்| நேர்| நேர் நேர்| நிரை நேர்| நேர் நிரை| நிரை| நேர்

கள்| ளத் | தால் கள்| வேம் எனல்.
நேர்| நேர் | நேர் நேர்| நேர் நிரை.


சரி, இன்றைக்கு அசை பிரிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டீர்கள் தானே! திருக்குறளை எடுத்து அதிலுள்ள வெண்பா பாடல்களை அசை பிரித்துப்பாருங்கள். அடுத்த பாடத்தில் 'சீர்' பற்றி படிப்போம்..

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 3

கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுர கவி, சித்திர கவி என நான்கு வகை உள்ளன.
ஆசு கவி - உடனடியாக விரைவாக இயற்றப்படும் கவிதை வகையினரை இவ்வாறு பிரிக்கலாம்.
வித்தார கவி - வ்¢ரிவாக விளக்கமாக இயற்றப்படும் கவிதை

மதுர கவி - இனிமையான குரலில் பாடக்கூடிய கவ்¢தை
சித்திர கவி - ஓவியங்கொண்டு புனையப்படும் கவிதை

இனி எழுத்தின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஐகாரக் குறுக்கம்

ஐ என்பது நெடில் எழுத்து. இவற்றுள் பை, நை, ஐவர், தை மாதம் போன்றவற்றிலுள்ள பை, நை, ஐ, தை ஆனது 2 மாத்திரை கொண்டு விளங்கும். ஆயினும் சில இடங்களில் இவ்வெழுத்துத் தன் இயல்பான இரண்டு மாத்திரையை வ்¢டக் குறைந்து ஒலிக்கும். இது ஐகாரக்குறுக்கம் ஆகும். தைத்து, பைத்து, கைத்து ஆகிய சொற்களில் தை, பை, கை ஆகிய எழுத்துக்கள் தன் இயல்பான இரண்டு மாத்திரையை விடக் குறைவாக ஒலிப்பதைக் காணலாம்.

(வாசித்து பயிற்சி பெறுக!)

ஆய்தம்

ஆய்த எழுத்தும் செய்யுளுக்கு உறுப்பாக வருவதாகும். இது குறில் எழுத்தை அடுத்தும், உயிரெழுத்தோடு கூடிய வல்லின மெய் எழுத்துக்கு முன்னும் வரும்.

எ.டு : அ·து, இ·து, எ·கு, வெ·கா.

குற்றியல் உகரம்

உகர எழுத்து1யின் முதல் எழுத்தாக உயிரெழுத்து வருமானால் அது புணரும் போது தனக்குரிய ஒரு மாத்திரையைவிடக் குறைந்து ஒலிக்கும். இதன் அளவு அரை மாத்திரையாகும். இதனை
"உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்" எனச்சூத்திரம் காட்டும்.

பட்டு என்று தனியாக எழுதும்போது "டு" என்ற எழுத்து ஒரு மாத்திரை பெறுகிறது. இதன் பக்கத்தில் மளிகை என்கிற என்கிற சொல் வரும் போது பட்டு மளிகை என வரும். இதில் மாத்திரை ஏதும் குறையவ்¢ல்லை.

எ.டு

பட்டு + மளிகை = பட்டு மளிகை
பட்டு + வாணிபம் = பட்டு வாணிபம்
பட்டு + துணி = பட்டுத்துணி

ஆனால் பட்டு என்னும் சொல்லை அடுத்து ஆடை என்னும் சொல் வரும்போது பட்டாடை என ஆகிறது.
பட்டு + ஆடை = பட்டாடை

இதில் நிலை மொழியின்(பட்டு) கடைசி எழுத்தான (ட்+உ = டு) உ என்பதையடுத்து வருமொழியின் முதலில் ஆ என்கிற உயிர் எழுத்து வரும்போது நிலை மொழியின் ஈற்றில் உள்ள 'உ' கரம் கெட்டு ஓடுகிறது. இதனால் பட்ட்+ஆடை என வந்து பட்டாடை ஆகிறது.

எ.டு

கரும்பு + ஆலை = கரும்பாலை
மாடு + அல்ல = மாடல்ல
கேட்டு + உவந்தான் = கேட்டுவந்தான்4 (கேட்டு மகிழ்ந்தான்)

குறிப்பு : 1. உகர எழுத்துக்கள் என்பவை 'உ' உயிரெழுத்துடன் இணையும் மெய்யெழுத்துக்களைக் குறிக்கும். அதாவது கு, சு, டு, து, பு, று - இவை யாவும் குற்றியலுகர எழுத்துக்கள் எனப்படும்.

2. நிலை மொழி - முதலில் நின்று கொண்டிருக்கும் வார்த்தையை நிலை மொழி என்பர்.

3. வரும் மொழ்¢ - நிலை மொழியுடன் இணையும் அடுத்த வார்த்தையை வரும் மொழி என்பர். குற்றியலுகரத்துடன் இணையும் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாகவே இருக்கும்.

4. இதில் டு என்பதில் உள்ள உகரம் கெட்டு வருமொழ்¢யில் உள்ள உயிர் எழுத்தான
உகரம் சேர்ந்து (ட்+உ) டு என ஆகிறது. காண்பவர்களுக்கு வருமொழியில் உள்ள
உகரம் கெட்டது போல் தோன்றும். ஆனால் விதிப்படி நிலை மொழியில் உள்ள
உகரமே கெட்டது என்பதாம். எனவே பொருள் மாறுபடாமல் கேட்டு மகிழ்ந்தான்
என்றே கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றியலுகரம் வரும் மொழியிலும் 'உ'கரம்
வந்தால் மட்டுமே நிகழும்.

குற்றியல் இகரம்

குற்றியலுகரத்தின் சொற்களுக்கு முன்னால் 'ய' கர எழுத்து வரும்போது அந்த உகரம் இகரமாகத் திரிகிறது. இது தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து 1/2 மாத்திரையாக ஒலி பெறுகிறது.
நாடு என்னும் சொல்லின் முன்னே யாது என்னும் சொல் இணையும் போது நாடியாது என வரும். இதில் 'டு' என்னும் எழுத்துத்திரிந்து 'டி' என மாறி மாத்திரையிலும் குறைந்து ஒலிக்கும்.

எ.டு:-

நாடு + யாது = நாடியாது
குழலினிது + யாழினிது = குழலினிதியாழினிது
காட்டு + யானை = காட்டியானை

உகரம் இன்றியும் குற்றியலிகரம் வருவதுண்டு.

எ.டு:-

கேள் + மியா = கேண்மியா

கேண்மியா என்பதில் 'மி' குற்றியலிகரமாகக் குறைந்த ஒலி பெற்றது.
எனவே குற்றியலிகரமானது வரும் மொழியின் முதல் எழுத்தாலும் திரியப்பெறாலாம் எனத் தெரிகிறதல்லவா?

அளபெடை

உயிர் எழுத்துக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து நீட்டி ஒலிக்கும் தன்மையானால் அது "உயிர் அளபெடை" ஆகும். மெய்யெழுத்து கூடுதலாகச் சேர்ந்து ஒலிக்கப்பெறின் "ஒற்று அளபெடை" எனப்படும். (மெய் எழுத்தை ஒற்று என்பர்)

அளவு மிகுந்து ஒலிக்கும் எழுத்துக்களுக்கு அளபெடை என்று பெயர்.

"...துப்பாய தூஉம் மழை". இதில் தூஉம் என்னும் சொல்லில் தூ என்கிற நெடில் இரண்ட் மாத்திரை உடையது. இதனை அடுத்து 'உ' என்கிற உயிர் அதன் முன்னர் உள்ள 'தூ' என்கிற எழுத்தோடு கூடுதலாக ஒரு மாத்திரை கொள்ளுமாறு உள்ளது. "தூஉ" என்பது மூன்று மாத்திரை அளவு ஒலி பெறுகிறது. இந்த 'உ' உயிர் அளபெடை ஆயிற்று.

எ.டு:-

"ஏரின் உழாஅர் உழவர்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

"தெய்வம் தொழாஅள்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

" நமச்சிவாய வாஅழ்க" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

"யானை வெரூஉம் புலிதாக் குறின்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?- 2

பாகம் - 2

தெருவீதிகளில் வண்ணமிகு கோலங்களை அமைத்து மங்கையர் அழகு செய்கின்றார்கள். அப்போது அவை நன்கு அமைவதற்குக் கருவியாக உள்ளவை அவற்றுக்குரிய கோலப்புள்ளிகளே!

வண்ணக்கோலங்கள் பளிச் எனத் தோன்றினாலும் அதற்குள்ளே விளங்கும் புள்ளிகள் வைக்கப்பெற்று வரையப்படும் கோலங்கள் மிகுந்த எழில்பெறும். இது போல செம்மையான எழில் மேவும் கவிதைகளுக்கு இலக்கண மரபுகள் என்ற கோலப்புள்ளிகள் உதவி புர்¢கின்றன. எனவே இத்தகைய மரபுகளைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

கவ்¢தையின் உறுப்புகள் ஆறு. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன. தற்போது யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணமே கவிதைக்கு உரிய இலக்கணமாகப் பெரிதும் கொள்ளப்படுகிறது.

எழுத்து

செய்யுள் உறுப்புகளுள் முதலாவதாக விளங்கும் எழுத்து என்பதைக் காண்போம்.

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் :-

பொதுவாக மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 21. அவற்றுள்

உயிர் எழுத்துக்கள் = 12
வல்லின எழுத்துக்கள் = க, ச, த, ப = 4
மெல்லின எழுத்துக்கள் = ஞ, ம, ந = 3
இடையின எழுத்துக்கள் = ய,வ = 2

(குறிப்பு: "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" எனும் நோக்கில் 'ச' சேர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் 'ச' எழுத்து குறிப்பிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அவ்வாறே குறிப்பிடாத பிற எழுத்துக்களும் வர நேரிடலாம்.)

எழுத்து வகைகள்:-

எழுத்து உறுப்புகள் 13 வகைப்படும்.

1. குறில் எழுத்து (குற்றெழுத்து)
2. நெடில் எழுத்து ( நெட்டெழுத்து)
3. உயிரெழுத்து
4. மெய்யெழுத்து
5. உயிர்மெய் எழுத்து
6. வல்லின எழுத்து
7. மெல்லின எழுத்து
8. இடையின எழுத்து
9. ஆய்த எழுத்து
10. குற்றியலுகரம்
11. குற்றியலிகரம்
12. ஐகாரக்குறுக்கம்
13. அளபெடை

மாத்திரை:-

ஓர் எழுத்தை இயல்பாக ஒலிப்பதற்கு ஆகும் நேரம் மாத்திரை என்று கூறப்படும். இந்த மாத்திரை அளவினை வைத்தே எழுத்தானது வகைப்படுத்தப்படுகிறது. எனவே மாத்திரை குறித்து அறிந்துக்கொள்ளுவது கவிதை எழுதுவதற்கு மிகவும் அவச்¢யமானதாகும்.

ஒரு மாத்திரை கால அளவு என்பது கைவிரல் நொடிக்கும் நேரம், அல்லது கண்ணிமைக்கும் நேரம் எனவும் ஆகும். குறில் எழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவுக்காலமும் நெடில் எழுத்தை ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை அளவுக்காலமும் ஆகும்.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

இவற்றுள்,

அ,இ,உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
குறில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 1 மாத்திரை.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில் எழுத்துக்கள்.
நெடில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 2 மாத்திரைகள்.

மெய் எழுத்துக்கள் 18. அவை,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.

மெய்யெழுத்துக்கள் 18ம் உச்சரிக்கும் வகைகளைக்கொண்டு

1. வல்லின எழுத்துக்கள் - க், ச், ட், த், ப், ற் - 6

2. மெல்லின எழுத்துக்கள் - ங், ஞ், ண், ந், ம்,ன் - 6

3. இடையின எழுத்துக்கள் - ய், ர், ல், வ், ழ், ள் - 6

என்று பிரிக்கிறோம்.
இவை ஒவ்வொன்றும் அரை (1/2) மாத்திரை உடையது.

18 மெய் எழுத்துக்கள் 12 உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து ஒலிப்பது உயிர் மெய் எழுத்துக்களாகும். இவற்றின் எண்ணிக்கை 216. இவற்றுள்,

குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (5 * 18) = 90
இவை ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை கொண்டு இயங்கும்.குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (5 * 18) = 90 

இவை ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை கொண்டு இயங்கும்.


நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் (7 * 18) = 126
இவை ஒவ்வொன்றும் இரு மாத்திரை கொண்டு இயங்கும்.


குறிப்பு : 1. உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் க, கி, கு, கெ, கொ.... முதலானவை ஒரு மாத்திரை அளவே. இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 1 மாத்திரையும் சேர்ந்து 1 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.


குறிப்பு : 2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் கா, கீ,கூ, கே, கோ.... முதலானவை இரு மாத்திரை அளவே. இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 2 மாத்திரையும் சேர்ந்து 2 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?


மன்றத்தினருக்கு வணக்கம். மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்பதை வ.த. இராமசுப்ரமணியம் அவர்கள் எழுதிய நூலிலிருந்து இங்கே தரலாம் என்று உள்ளேன். கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பர். என்னைப்போல் மரபுக்கவிதை எழுத விரும்புபவர்களுக்கு உதவும் எண்ணத்திலேயே இதை ஆரம்பிக்கிறேன்.

"யாப்பருங்கலக்காரிகை கற்றுக் கவிபாடுங்கால்
பேரிகை கொட்டி பிழைப்பது மேலாம்."



என்பர். எனினும் அலை ஓய்வது எப்போது? நாம் முழுகுவது எப்போது?


கவிதை எழுதுவதற்கு இலக்கிய அறிவும், இலக்கணத்தேர்ச்சியும் வேண்டும் என்பர். நல்ல தரமான கவிதைகளைப்படைக்க இத்தகைய இலக்கண இலக்கியங்களில் புலமை கொண்டிருக்கவேண்டும் என்பது கருத்தேயன்றி கவிதை எழுதுவதற்கான தடைகள் அல்ல.


கவிதை எழுத மிக முக்கியமானது உணர்ச்சி. ஒரு கவிஞன் எதனை இலக்காகக் கொள்கின்றானோ
அதுவே இலக்கிய அறிவாக அவனுக்கு அமைகிறது. வாழ்க்கையில் உண்டாகும் அனுபவமே அவனுக்கு இலக்கிய அறிவைப்புகட்டுகின்றது. கவிஞன் என்பவன் எதனையும் கூர்ந்து நோக்கும் இயல்புடையவன். அவன் எதனை எந்த நோக்கத்தில் பார்க்கின்றானோ அதுவே அவனுக்கு அதனைப்பற்றிய அறிவை ஈட்டித்தருகிறது. எனவே உணர்ச்சிகளை இதமாகக்கொட்ட வேண்டும். பிறர் மனத்தில் பதியுமாறு நயமிகு நற்றமிழில் கொடுக்கவேண்டும். அதற்கு மொழி அறிவு நிச்சயம் தேவை. இலக்கியங்களைச் சுவைத்து நமது இலக்கிய அறிவைப்பெருக்கிக்கொள்ளலாம். உணர்வுகளை முழுமையாக அனுபவித்து தன்னிச்சையாக எழுதப்படும் கவிதைகள் இலக்கணங்கள் பார்ப்பதில்லை.


முற்காலத்தில் பாடல்கள் யாவும் இறையருளால் பாடப்பெற்றவை என்றும் திருஞான சம்பந்தர்,
சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், காளமேகப்புலவர் முதலானோர் அவ்வாறு பாடிய அருளாளர்கள் என்றும் கூறுவர்.


கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுரகவி, சித்திரகவி என நான்கு வகை உள்ளன. எனினும்
பெரும்பான்மையான கவிதைகள் தனித்து ஒரு கவிஞனின் சிந்தனையிலிருந்து பேனா முனயின் வழியாக வெளிவந்து மலர்கிறது.


கவிதை எழுதுவதற்கு நிறையச் சொற்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றின் வீரியத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். அது மக்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.


இதன் அடிப்படையில் இனி இலக்கண மரபுகள் என்பவற்றின் அடித்தளத்தைச் சிறிது நோக்குவோம்.


யாப்பிலக்கணத்தின் படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றையும்
பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா - இவைகளின் இலக்கணங்களையும் பற்றி
இனிவரும் தொடரில் எளிமையாக விளக்கக் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக